Quantcast
Channel: பாமரன்
Viewing all 103 articles
Browse latest View live

இருந்தா நல்லாயிருக்குமேன்னுதான் சொன்னேன்…

$
0
0

கமலின் தசாவதாரத்தில் வரும்
Tho.Pa3“நான் கடவுள் இல்லேன்னு எங்கீங்க சொன்னேன்?
இருந்தா நல்லாயிருக்குமேன்னுதான் சொன்னேன்….”
என்கிற வசனம் உலகபிரசித்தம்.
.
ஆனால் இந்த வரிகளுக்குச் சொந்தக்காரர்
தொ.ப என்றழைக்கப்படும் தொ.பரமசிவன்.
இந்தத் தொ.ப கமலுக்கும் நண்பர்.
அவர் சொன்னதைத்தான் கமல் உரிமையோடு
தன் திரைப்படத்தில் பதிவு செய்திருப்பார்.
.
தமிழ் மக்களது பழக்கவழக்கங்கள்
அவர்களது பண்பாட்டு கூறுகள் பற்றியெல்லாம்
பல்கலைக் கழக ஏ.சி.அறைகளில் உட்கார்ந்து
ஆராய்ச்சி செய்யாமல் மூலை முடுக்கில் இருக்கும்Tho.Pa. in Field
குக்கிராமங்களுக்கு எல்லாம் நடையாய் நடந்து
மக்களோடு மக்களாய் இருந்து
அநேக நூல்கள் வெளியிட்டவர்தான் இந்தத் தொ.ப.
.
ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ள்வர்கள்தான்
புண்ணியத்தலங்களைத் தேடிப்போவது வழக்கம்.
ஆனால் எனக்கும் எனது தோழர்களுக்கும்
புண்ணியத்தலம் ஒன்று உண்டென்றால்
அது பாளையங்கோட்டைதான்.
எங்கள் பேட்டரிக்கு சார்ஜ் குறையும்போதெல்லாம்
சார்ஜ் ஏற்றிக்கொள்ள பயணப்படும்
ஒரே இடம் தொ.பரமசிவன் இருக்கும் பாளையங்கோட்டைதான்.
.
மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டால் போதும்.
ஒன்று நாங்கள் நண்பர்கள் படையோடு போய் அங்கு நிற்போம்.
அல்லது தொ.ப.வின் தோழர்களிடம் இருந்தோ
அல்லது அவரிடமிருந்தோ அலைபேசி அழைப்பு வரும்….
”என்ன…. இன்னும் வரலை?” என்று.
அப்புறம் என்ன பாளையங்கோட்டை நோக்கி பயணம்தான்.
.
பெரிய்ய்ய்ய்ய பிரபலத்தைப் பார்க்கப் போகிறோம்
என்கிற கற்பனையோடெல்லாம்
கிளம்பிப் போனால் தொலைந்தோம்.

அவரோ தெற்கு பஜாரில் உள்ள
ஏதோ ஒரு கடைத் திண்ணையில் உட்கார்ந்து
டீ குடித்துக் கொண்டிருப்பார்.
எப்போதும் அவரைச் சுற்றி நண்பர்கள் கூட்டம்
கலகலத்துக் கொண்டிருக்கும்.
.
அவரைச் சுற்றி ஞானிகளும் உண்டு.
என்னைப் போன்ற பேமானிகளும் உண்டு.
சகலருக்கும் ஒரே மாதிரி மரியாதைதான்.
.
போய் இறங்கிய கொஞ்ச நேரத்தில்
அவரோடு எங்கள் பயணம் தொடங்கும்.

அது தமிழர் நாகரீகம் வெளிவந்துவிடக்கூடாதே
என்கிற அச்சத்தில் கால்வாசி ஆராய்ச்சியோடு
கால்பரப்பிக் கிடக்கும் ஆதிச்சநல்லூருக்கோ
Tho.Pa Scootterஅல்லது சமணச் சிற்பங்கள் குவிந்திருக்கும்
கழுகுமலைக்கோ போய் இறங்கும் எங்கள் குழு.
ஒவ்வொன்றுக்கும் பின்னணியில் புதைந்து கிடக்கும்
உண்மைகளை வரலாற்று ஆதாரங்களோடு
விளக்கிக்கொண்டே வருவார் தொ.ப.
.
ஒருமுறை உக்கிரங்கோட்டையில் உள்ள
ஒரு புராதன கோயிலுக்குள் அழைத்துச் சென்றவர்
அங்குள்ள ஒரு சிற்பத்தைக் காட்டி

“அதப் பாருங்க…. அந்த முகத்தில் தெரியும்
புன்னகைக்கு முன்னால் மோனாலிசாகூட
பக்கத்தில் நிற்க முடியாது….” என்றார்.

அது பல நூற்றாண்டுகளுக்கு முன்னரான
வாமதேவி சிலை. உண்மைதான்.
அதன் புன்சிரிப்பில் அத்தனைபேரும் கிறங்கிப் போனோம்.
.
சிற்பங்கள் என்றில்லை.
நாம் உண்ணும் உணவில்…
கற்கும்கல்வியில்…
அர்த்தம் புரியாமல் வாழும் வாழ்வில்….
நமக்குத் தெரியாத எத்தனை பண்பாட்டுக்கூறுகள்
ஒளிந்து கொண்டிருக்கின்றன என்பதை
மழலைக்கும் புரியும் மொழியில் சொல்பவர்தான் தொ.பரமசிவன்.
.
பள்ளி என்கிற சொல்லே
சமணத் துறவிகளிடம் இருந்து வந்ததுதான் என்பார்.
.
கள்ளுண்ணாமை…
புலால் மறுத்தல்….
துறவு….
இம்மூன்றிலும் தமிழர்களிடம்
தோற்றுப் போனார் திருவள்ளுவர் என்று விளக்குவார்.
.
கீரையை ஏன் நாம் வீட்டிற்கு வந்த
விருந்தினர்களுக்கு கொடுப்பதில்லை என்கிற
கேள்வியை வீசி..

”ஏன்னா கீரை என்பது ஏழ்மையின் சின்னம்… அதான்”
என்கிற பதிலையும் கொடுப்பார் தொ.ப.
.
அரசியலும் அத்துப்படி அவருக்கு.

பெரியாரின் இந்தி எதிர்ப்புத் தளபதிகளில்
ஒருவராய் இருந்த பரவஸ்து ராஜகோபாலாச்சாரி அய்யங்கார் குறித்து….
.
“பிள்ளைமார்” சமூகத்தில் இருந்து இஸ்லாத்துக்கு மாறி
“கிருஸ்தவ” மங்கையை மணந்து வீரப்போர் புரிந்த
மருதநாயகம் என்றழைக்கப்பட்ட கான்சாகிப் குறித்து….
.
கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில்
வகுப்புவாரி உரிமைக்காகக் குரல் கொடுத்து
லண்டன் சென்று உயிர்நீத்த டி.எம்.நாயர் குறித்து….
.
அவருக்கும் ஹோம்ரூல் அன்னிபெசண்ட் அம்மையாருக்கும்
நிகழ்ந்த செம ஃபைட் குறித்து….
.
அன்னிபெசண்ட்டுக்கும் பெர்னாட்ஷாவுக்கும்
இருந்ததாகச் சொல்லப்பட்ட காதலின் முறிவு குறித்து……

இப்படி ஏகப்பட்ட குறித்து…. குறித்து போட்டுக்கொண்டே போகலாம்
தொ.ப.. குறித்து பேசினால்.

எல்லாவற்றையும் சுவாரசியமாகச் சொல்லுவார்
அந்த மனோன்மணியம் பல்கலைக் கழகத்தின்
முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் தொ.பரமசிவன்.
.
போனமாதம் அவரைப் பார்க்கப் போயிருந்தபோது
கண்பார்வையற்றோருக்காக
தமிழில் பிரெய்லி கொண்டுவந்த Anne Askwith பற்றிச் சொல்லிவிட்டு…

”பார்வையற்ற நம் மக்களுக்காக
போன நூற்றாண்டுலயே ப்ரெய்லி கல்வியைக் கொடுத்த
அந்த அம்மையாரை நாம கண்ணம்மைன்னுதான் அழைக்கனும்” Tho.Pa Single
என்றார் மனம் நெகிழ.
.
தொ.ப.வின் எண்ணற்ற ஆதங்கங்களில் இன்னொன்று
நரசிம்மலு நாயுடு குறித்ததுதான்.
கோவையில் அவர் பெயரில் ஒரு பள்ளி இன்றும் உள்ளது.
.
1900 லேயே வேளாண்மை குறித்து அற்புதமான
நூலை எழுதியவர் நரசிம்மலு நாயுடு.

”அவர் எழுதிய “விவசாயம் அல்லது கிருஷி
சாஸ்திர சாரசங்கியம்” என்கிற நூல் தமிழில்
முதன்முதலில் வந்த வேளாண்மை குறித்த அருமையான நூல்.

ஆனால் அவரைப் பற்றி இன்னும் ஒரு பல்கலைக் கழகத்துலகூட
யாரும் ஆராய்ச்சிப்படிப்புக்காக இதுவரைக்கும் தொடக்கூட இல்லை……

அருமையான மனிதர்ங்க அவர்.
நீங்க இதப் பத்தி எங்கியாவது எழுதுங்க…” என்றார்
மிகுந்த ஆதங்கத்தோடு.
.
அதான் எழுதீட்டமில்ல….
ஊதற சங்க ஊதியாச்சு.
இது விழுகுற காதில விழுந்தா சரி.
.
ஆனா இதப் படிக்கிற நீங்க செய்யறதுக்கும் ஒன்னு இருக்கு.
.
.
.
அதுதான்….
.
.

நீங்க திருநெல்வேலிக்கு அல்வா வாங்கறதுக்கோ….

தொப்பைக்கு எண்ணை தடவி
குற்றாலத்துல குளிக்கறதுக்கோ போறப்போ…

அப்படியே பாளையங்கோட்டைக்கும்
ஒரு விசிட் அடிச்சு நம்ம தொ.ப.வை ஒரு பார்வை பார்த்துட்டு வாங்க.

உங்குளுக்கும் உற்சாகமா இருக்கும்.
தலைவன் தொ.ப.வுக்கும் அது படு உற்சாகமா இருக்கும் மக்கழே……!
.
.

ஏன்னா… அவரோட பேசறதுங்குறதே….
ஒரு பிரம்மாண்டமான நூலகத்துக்குள்ள நுழைஞ்சு வர்ற மாதிரிதான்.
.
.
( “டுபாக்கூர் பக்கங்கள்” – குமுதம் வார இதழ்.)

Tho.Pa4



ஹலோ…. பிரபா ஒயின்ஸ் ஓனருங்களா?

$
0
0

Soodhu2
சென்னையிலுள்ள காவல் நிலையத்தில் இருந்து திடீரென ஒரு அழைப்பு.
.
என்னடா இது….
நாம ஏதும் சமீபத்தில் எந்தக் கேசிலும் மாட்டவில்லையே….
குறைந்தபட்சம் செவண்டி பைவ் கேஸ்கூட பெண்டிங் இல்லையே….
.
என்னவாக இருக்கும்?
.
ஒருவேளை சுவிஸ் வங்கியில் பதுக்கி இருக்கும் கருப்புப்பண விவகாரமா இருக்குமோ?
.
வெங்காயம்….
வெள்ளைப்பணத்துக்கே வக்கில்லாத என்னைமாதிரி ஆளுங்க கருப்புப்பண கேசில் மாட்டினால்….
காசுள்ள கபோதியெல்லாம் அப்புறம் நாண்டுகிட்டுச் சாக வேண்டீதுதான் என்று யோசித்துக் கொண்டே……
.
ஹலோ…. பிரபா ஒயின்ஸ் ஓனருங்களா? என்றேன்.
.
”நான் இன்ஸ்பெக்டர் ராஜு பேசறேன்” என்றது மறுமுனை.
.
அய்யோ சாரிங்க ஆபீசர்….. நான் என்னாவது ஹெல்ப் பண்ணனுமா?
.
”இல்ல பாஸ்…. நீங்க தொ.பரமசிவன் பத்தி ஒரு பத்திரிக்கைல எழுதீருந்த கட்டுரை படிச்சேன்…… சூப்பர் பாஸ்.
இந்தப் புத்தகக் காட்சிலகூட அவரோட “மானுட வாசிப்பு” புத்தகம் வாங்கினேன்….. அட்டகாசம் சார்….
அப்புறம் நம்ம அழகிய பெரியவனோட சிறுகதைகள்…..” என பேசிக் கொண்டே போனார் இன்ஸ்பெக்டர் ராஜு.
.
நான் தலை சுற்றிக் கீழே விழாதது ஒன்றுதான் பாக்கி.
.
என்னாது…. போலீஸ் டிப்பார்ட்மெண்ட்ல படிக்குற ஆளும் இருக்கா? அதுவும் இந்த மாதிரி புத்தகம் எல்லாம் படிக்கிற ஆளா?

”இந்தப் பஞ்சப்படி பாக்கிய எப்பக் குடுப்பாங்க.? ”
.
”ஏழாவது சம்பளக்கமிஷன் சமாச்சாரத்த மாநில அரசு எப்ப சார் நடைமுறைப்படுத்தும்?”
.
”அர்ரிர்யர்ஸ் பணத்தை ரொக்கமா குடுப்பாங்களா இல்ல…. பிராவிடண்ட் பண்டுல சேர்த்தீருவாங்களா? ”
.
”திடீன்னு மண்டையப் போட்டா வர்ற கிராஜுட்டி பணத்தை கூட்டிக் குடுப்பாங்களா இல்லையா?”
.
”ரிட்டையர்மெண்ட் வயச 98 ஆ உயர்த்துவாங்களா…மாட்டாங்களா.?”
.
அப்புடீங்குற உலகமகா மேட்டரெல்லாம் பேசாம….. தொ.ப.வாம்….. இலக்கியமாம்….?
.
அய்யோ…. இது ரொம்ப ரொம்ப மோசமான விஷயமாச்சே.
.
ச்சே… காவல்துறைலயும் இந்தமாதிரி கருப்பு ஆடுகளா?
.
நோ திஸ் ஈஸ் டூ Bad.
.
.
(”ஒரு தற்குறியின் நாட்குறிப்புகள்” ஜனனம் வார இதழ்)


அப்பா என்றழைக்காத உயிரில்லையே….

$
0
0

Balan1
கோவை நகரவாசிகளுக்கு பாலனைத் தெரியாமல் இருக்காது.
அவ்வளவு பிரபலம்.
.
உடனே அவர் எம்.எல்.ஏ.வா? மேயரா? கவுன்சிலரா ?
என்றெல்லாம் முடியைப் பிய்த்துக்
கொள்ள வேண்டியதில்லை.
.
எங்கெங்கெல்லாம் மக்கள்
கூட்டம் கூட்டமாக இருக்கிறார்களோ….
அங்கெல்லாம் பாலன் இருப்பான்.
அதுதான் அவனது அறுவடைக்கான இடங்கள்.

பாலனது தொழிலைப் பற்றி
இலக்கிய நயத்தோடு சொல்வதானால்
“இரந்துண்டு வாழ்தல்” என்றும் சொல்லலாம்.

கொச்சையாகச் சொல்வதானால்
பிச்சை எடுத்தல் என்றும் சொல்லலாம்.

இத்தனைக்கும் அவன் என் பால்யகாலத் தோழன்.
எங்கள் வீட்டுக்கு நேர் எதிர்வீடு பாலனுடையது.
சிறுவயதில் அவனோடுதான் குண்டு விளையாடுவேன்.
விளையாடும்போது யாராவது “கிழவா!” என்று
சொல்லிவிட்டால் பாலனுக்குக் கோபம் வந்துவிடும்.
பெருவிரலை மடக்கி வைத்து விலாப் பகுதியில் குத்துவான்.
.
ஏதோ ஹார்மோன் குறைபாடால்
அவனுக்கு சிறுவயதிலேயே
வயதுக்கு மீறிய முதிர்ச்சி.
பதினைந்து வயதிலேயே முப்பது வயதுத்
தோற்றத்தோடு இருப்பான்.
இத்தனைக்கும் அவன் குடும்பம் வசதியான குடும்பம்.
.
அவன் வீட்டை விட்டு வெளியேறியதற்கு
அல்லது வெளியேற்றப்பட்டதற்கு
அவனது முகத்தோற்றம் காரணமா?
அல்லது வேறு ஏதேனும் காரணமா?
யாருக்கும் தெரியாது.

காலை தொடங்கி இரவு வரைக்கும்
தொடரும் அவனது பிச்சை எடுக்கும் பயணம்.
.
பூமார்கெட் பக்கம் கடை வைத்திருக்கும்
ஏதோ ஒரு புண்ணியவான் ஒரு மொட்டை மாடியில்
படுத்துக் கொள்ள அடைக்கலம் கொடுத்திருக்கிறார்.

மழை பலமாக அடிக்கும் காலங்களில்
பாலன் என்ன செய்கிறானோ என்கிற நினைவாக இருக்கும்.
.
பாலனுக்கு என் இயற்பெயரும் தெரியாது.
புனைப்பெயரும் தெரியாது.

ஒன்று சின்ன வயதில் என்னைத் திட்டக் கூப்பிடும்
”டேய் ஜொள்ளு” என்கிற பட்டப்பெயர் தெரியும்.
அல்லது வீட்டில் அப்பா செல்லமாகக் கூப்பிடும் ”ராஜா”
என்கிற பெயர் தெரியும்.

பாமரன்னு சொன்னா யாருடா அது?
என்று கேட்பான்.
.
ஊருக்கே உபதேசம் செய்யும். எனக்கு
நண்பன் பாலனுக்கு என்ன வழி செய்வது
என்பது மட்டும் இன்னமும் புரிபடவில்லை.

எத்தனையோ பிரபலங்களைத் தெரிந்து வைத்து என்ன பயன்?
அவனை வீட்டில் கொண்டுபோய் சேர்க்க முடியுமா?
அவர்கள் இவனை ஏற்றுக் கொள்வார்களா?
அல்லது வேறு ஏதாவது வகையில் உதவ முடியுமா?
என்பது எதுவும் இன்றுவரை புரிபடவில்லை எனக்கு.
.
அவனுக்கும் நம்மைப்போல வாழத்தான் ஆசை.
ஆனால் அவனது முகத்தோற்றத்துக்கு
யாரும் அவனை வேலையில்
வைத்துக் கொள்ளத் தயங்குவார்கள்.
.
இந்த உலகில் அவன் போன் செய்யக்கூடிய
ஒரே நண்பன் நான் மட்டும்தான்.
எங்காவது ஒரு ரூபாய் பூத்தில் நின்றுகொண்டு
எனக்குப் போன் போடுவான் தினமும்.
.
”யோவ்…. ராஜாண்ணா… எங்கிருக்கற?” என்று.
இன்னைக்கு எவ்வளவுடா வசூலு? என்றால்…
”கம்மிதான்…. எண்பதுதான் கெடச்சுது….” என்பான்.
.
போனவாரம்கூட
”எனக்கு இன்னைக்கு பொறந்தநாளு ராஜாண்ணா…” என்று
யாரோ ஒரு நல்ல உள்ளம் எடுத்துக் கொடுத்த
பேண்ட்…ஷர்ட்டில் வந்து நின்றான்.

சட்டையின் உள் பாக்கெட்டில்
அவன் இன்னும் உயிராய் நேசித்துக் கொண்டிருக்கும்
தன் அப்பாவின் படத்தை ஒரு சிறிய நோட்டுப் புத்தகத்துக்குள்
பத்திரமாக வைத்திருக்கிறான் பாலன்.
.
“அப்பா என்றழைக்காத உயிரில்லையே” என்பதுதான்
அவனைப் பொறுத்தவரை பிடித்தவரிகள்.
அவனது அந்த அப்பாவும் போய்ச் சேர்ந்து
இருபது வருடங்களாகி விட்டது.
.
பாலனை எங்காவது வழியில் பார்த்தால்
”உன் ஃப்ரெண்டு ராஜா…
உன்னப் பத்தி எழுதீருக்கிறதப் படிச்சேன்…”ன்னு
சொல்லீட்டு அவனுக்கு ஏதாவது
வயிராற வாங்கிக் குடுத்துட்டு வாங்க பிரதர்.
.
எனக்கும் பாலனுக்கு அடிப்படையில் ஒரே ஒரு வித்தியாசம்தான்.

அவன் பிச்சை எடுப்பதைக் கொள்கையா வெச்சிருக்கான்.

நானோ கொள்கை பேசி நாசூக்கா பிச்சை எடுக்கிறேன்.

அவ்வளவுதான் வித்தியாசம்.
.
.
Balan2
(“டுபாக்கூர் பக்கங்கள்.” குமுதம் வார இதழ் )


விபத்தல்ல…அப்பட்டமான அரசியல் படுகொலை.

$
0
0

bezwada-wilson
இந்த முறை…
ஓர் அற்புதமான மனிதருக்கு
மகசேசே விருது சென்று சேர்ந்திருப்பது பற்றியும்…..

அந்த மனிதர் பெசவாடா வில்சன்தான்
என்பது பற்றியும் நாம் ஏற்கெனவே அறிந்ததுதான்.
.
பத்து வருடங்கள் முன்பே இம்மாமனிதரை
கோவைக்கு அழைத்து வந்திருந்தார்
ஆதித் தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான்.
அவரது புண்ணியத்தில்தான் இந்த அற்புதமான மனிதரை
நான் சந்தித்து உரையாட முடிந்தது.
.
ஏறக்குறைய பத்துப்பதினைந்து நண்பர்கள்
மட்டுமே பங்கு கொண்ட கலந்துரையாடல் அது.
.
நாடு முழுவதும் கொடும் துயரத்துக்கு ஆளாகியுள்ள
இம்மக்கள் குறித்து அவர் உரையாற்றியது
இன்னமும் இதயத்தில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
.
கர்நாடகாவின் கோலார் தங்கவயலில் பிறந்த வில்சனது
பால்யபருவம் துயரம்மிக்கது.
பெற்றோர்கள் மனிதக் கழிவுகளைச் சுமக்கும் தோட்டிகள்.
இது தெரியாது வளரும் பெசவாடா வில்சன்
பள்ளியில் கேலிக்குள்ளாகும் போதுதான்
தெரியவருகிறது தனது பெற்றோர் படும் துயர்.
தற்கொலைகூட செய்து கொள்ளலாமா என்கிற எண்ணமும்
அப்பிஞ்சு நெஞ்சில் எழுகிறது.
.
கொஞ்சகாலம் ஆந்திராவில் ஒடுக்கப்பட்டோருக்கான
ஹாஸ்டலில் தங்கி பள்ளிக்கல்வி பெற்றபிறகு
இண்டர்மீடியட் வகுப்புக்காக மீண்டும்
கர்நாடகா வருகிறார் வில்சன்.
பின்னர் கல்லூரியில் அரசியல் அறிவியலில் பட்டம்.
.
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கும்போது
”செல்ல விரும்பும் வேலை” என்கிற கேள்விக்கு
அவரைக் கேட்காமலே “தோட்டி” என படிவத்தை
அங்குள்ள அதிகாரி பூர்த்தி செய்ததையும்…..
அதற்கு வில்சன் அந்த விண்ணப்பத்தை
அப்படியே வாங்கி அனைவர் முன்னிலையிலும்
கிழித்து எறிந்து விட்டு வந்ததையும்….
விக்கி பீடியாவில் ”சுட்டு” ஏகப்பட்டபேர் எழுதியாகிவிட்டது.
.
ஆனால்…. அதற்குப் பிறகு பெசவாடா வில்சன் செய்தது
அனைத்தும் அசாத்தியமான வேலைகள்தான்.
.
ஒடுக்கப்பட்டோரிலும் ஒடுக்கப்பட்டோராய்
இருக்கிற அப்பிரிவு மக்களுக்காக தன்னை
அர்ப்பணித்துக் கொண்டதுதான் அவர் செய்த முதற்பணி.
.
மனிதக் கழிவுகளை மனிதரே சுமந்து கொண்டு
மெளனத்தில் ஆழ்ந்திருந்தபோது
அம்மெளனத்தை உடைத்ததுதான்
பெசவாடா வில்சன் செய்த பெரும்பணி.
.
இந்த அவலத்தைக் கண்டுகொள்ளாத
கோலார் தங்கவயலின் அதிகாரிகள்….
கர்நாடக ஆட்சியாளர்கள்….
மத்தியில் ஆள்வோர் என அனைவரது கதவுகளையும்
கடிதங்கள் வாயிலாக உரக்கத் தட்டுகிறது
பெசவாடாவின் கரங்கள்.

1993 இல் இந்த அவலத்திற்கு எதிராக
சட்டம் வந்தாலும் சத்தமின்றி
தொடர்ந்து கொண்டே இருக்கின்றன இந்த அவலங்கள்.
.
1994 இல் டெக்கான் கிரானிக்கல் இதழில்
மனித மலத்தை மனிதர்களே சுமக்கும் துயரங்களை
புகைப்பட ஆதாரங்களோடு வில்சன் கட்டுரையாக எழுத
பரபரப்புக்குள்ளாகிறது பாராளுமன்றம்.
.
கர்நாடகாவில் மட்டுமில்லாது
நாடு முழுவதுமே ஒருங்கிணைக்கப்படுகிறார்கள்
யாரும் கேட்பாரற்ற இந்த எளிய மனிதர்கள்.

அப்படி உருவானதுதான் சஃபாய் கரம்சாரி இயக்கம்.
(Safai Karamchari Andolan) வில்சனுக்குத் துணையாக
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சங்கரனும் பால் திவாகரனும்
கரம்கோர்க்கிறார்கள்.
.
சட்டங்களை வெறும் ஏட்டில் மட்டும் எழுதி என்ன பயன்?
நடைமுறைக்கு வரவேண்டாமா? எனப் பொங்கி எழுந்து
2003 இல் மீண்டும் பொதுநல வழக்குகள் மூலம்
உச்ச நீதி மன்றத்தின் கதவுகளை உலுக்க…

இந்த அவலம் இன்னும் எங்கெங்கெல்லாம்
தொடர்ந்து கொண்டிருக்கிறது என்கிற பட்டியலைக்
கேட்கிறது உச்சநீதி மன்றம்.
பல மாநில அரசுகள் பட்டியலைக்கூட தராமல் இழுத்தடிக்கிறது.

2003ஆம் ஆண்டிலேயே ”உலர் கழிப்பிடங்கள் கூடவே கூடாது”
என்கிற சட்டம் வந்தாலும் 2011 புள்ளிவிவரப்படி
அந்த அவலத்தைச் சுமந்து கொண்டிருப்போர்
ஏறக்குறைய 8,00,000 பேர் என்று அடித்துச் சொல்கிறது
பெசவாடா வில்சனது இயக்கம்.

2014 இல் மீண்டும் இதை முடிவுக்குக் கொண்டு
வந்தே ஆக வேண்டும் என கடுமையாக
எச்சரிக்கிறது உச்ச நீதிமன்றம்.
.
நான்கு மாதம் முன்பு அம்பேத்கரின் 125 பிறந்த தினத்தின் போது
நாட்டின் அனைத்து மாநிலங்களின் வழியாகவும்
”எம்மைக் கொல்வதை நிறுத்துங்கள்” என்கிற முழக்கத்தோடு
நடைபெற்ற “பீம் யாத்திரை”யின் முடிவில்
டெல்லியில் அறிவித்தார் பெசவாடா வில்சன்:
.
“கடந்த சில வருடங்களில் மட்டும்
செப்டிக் டேங்க்குகளிலும்….
பாதாள சாக்கடைகளிலும் சுத்தம் செய்ய மூழ்கும் போது
விஷவாயு தாக்கி அநியாயமாக
தம் உயிரை இழந்தவர்களது எண்ணிக்கை மட்டுமே 1300.

இவை விபத்தல்ல
அப்பட்டமான அரசியல் படுகொலை.
தலித்துகளிலும் ஒடுக்கப்பட்டோராய் உள்ள
இவர்களுக்காக குரல் கொடுக்க எவருமில்லை”.
.
ஆம் உண்மைதான்.
.
நாம் அந்த மக்களுக்கு மட்டுமே
100 சதவீதம் ஒதுக்கீடு அளித்திருக்கிறோம்.
.
அடடா… என்னே நமது “பெருந்தன்மை”?
.
மனிதக் கழிவை மனிதர் சுமக்கும் அவலம் மிக்க
பணியில் மட்டும் பங்கு கேட்க இங்கு எவருமில்லை.

ஆனால் அவர்களுக்கான கல்வியிலும்,
பிற வேலை வாய்ப்புகளிலும் உள் ஒதுக்கீடு கொடுத்தால்
ஒப்பாரி வைப்பதற்கு மட்டும் அநேகர் உண்டு.
.
ஆக… சாதி மூட்டைகளிலேயே அடிமூட்டையாய்
அமுங்கிக் கிடக்கும் அந்த எளிய மக்களின் குரலை
எதிரொலிக்கும் பெசவாடா வில்சனுக்கு
மகசேசே விருதல்ல எந்த விருதும் தகும்.
.
பொதுவாக விருதுகளால் சிலருக்குப் பெருமை.
.
ஆனால் வில்சனைப் போன்றவர்களின் கரங்களில்
தவழும்போது விருதுக்கே அது பெருமை.
.
.
( ”ஒரு தற்குறியின் நாட்குறிப்புகள்” ஜனனம் வார இதழ். )


போரும் அமைதியும்…உனக்கொரு பொருள்…. எனக்கொரு பொருள்….

$
0
0

அமைதி என்கிற வார்த்தையைக் கேட்டாலே
அச்சமாக இருக்கிறது.

அமைதி….

யாருக்கான அமைதி?

எதற்கான அமைதி?

எப்பேர்ப்பட்ட அமைதி?
.
இப்படித்தான்….
IPKF1எண்பதுகளின் மத்தியில் அமைதியை வேண்டி நின்ற ஈழத்து மக்களுக்கு
அதைப் பரிசளிப்பதற்காக எண்ணற்ற டாங்கிகளோடும்
ஏவுகணைகளோடும் இங்கிருந்து சென்றது ஒரு ”அமைதி”ப்படை.
.
அது நிலை நாட்டிய ”அமைதி”யையும்…. ”
அகிம்சை”யையும் பற்றி ஈழத்து மக்களைக் கேட்டால்
இன்றும் சொல்வார்கள் தெளிவாக.
.
அந்த அமைதிக்காக காணிக்கையாக்கப்பட்ட
பல்லாயிரம் உயிர்களையும்….
பாலியல் வல்லுறவால் சிதைக்கப்பட்ட
பலநூறு ஜீவன்களையும் என்றும் மறவார்கள் அம்மக்கள்.
.
சிங்கள ராணுவத்துக்கு ஒரு தோட்டாகூட
செலவில்லாமல் நேசநாட்டு ஸ்பான்சரில் நிகழ்த்தப்பட்ட
அமைதிக்கான யுத்தம் அது.
.
தொண்ணூறுகளின் துவக்கம்தான்
இப்படித் தொலைந்து போயிற்று என்றால்

இரண்டாயிரங்களின் தொடக்கமோ
இரட்டை கோபுரத் தகர்ப்பில் ஆரம்பித்தது.

அத்தாக்குதல் குறித்து ஆயிரத்தெட்டு
சந்தேகங்கள் இருந்தாலும்
அகப்பட்டுக் கொண்டது ஆப்கானிஸ்தான்.

அதை வைத்து உலகமெங்கும் ”பேரமைதி”யை
”நிலைநாட்ட” அமெரிக்க அங்கிள் எடுத்துக் கொண்ட
”அசாத்திய முயற்சி”கள் சொல்லி மாளாதவை.
.
பயங்கரவாதத்தைப் பற்றியும்
உலக அமைதியைப் பற்றியும்
அமெரிக்க வள்ளலார்கள் மனம் உருகப் பேசிய பேச்சுகளில்
மனம் கிரங்கிப் போனார்கள் உலக மக்கள்.

அதுவரை அமெரிக்காவும் அதனது சி.ஐ.ஏ.வும்
உலகின் ஒவ்வொரு மூலையிலும்
எப்பேர்ப்பட்ட அமைதியை நிலை நாட்டியிருந்தார்கள் என்கிற
உண்மையை உணர்ந்திருந்தவர்கள்
வாயில் சிரிக்காமல் வேறொரு உறுப்பில் சிரித்தனர்.
.
பயங்கரவாத இயக்கங்களின் பட்டியல் என்று
பயங்கரவாத நாடே அறிவித்தது.

அப்புறமென்ன ஆப்கனோடு நிற்குமா அது?
ஈராக்கிலும் பத்து லட்சம் பேரை
மோட்சத்துக்கு அனுப்பும் பெரும்பணியை
சிரமேற்கொண்டு செய்து முடித்தது.

அதில் சதாம் உசேனது உயிரும் அடக்கம்.
.
இது சர்வதேசம். சரி.
.
அப்புறம் எப்படி இருக்கிறது இந்த தேசம்?
இதுதான் கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தம் நடத்திய பூமியாயிற்றே….

மூடநம்பிக்கைக்கு எதிராக முழக்கமிட்ட
நரேந்திர தபோல்கர் “அமைதியாக” முடித்து வைக்கப்பட்டார்.
.
பூனாவில் இவ்விதமாக அமைதி நிலைநாட்டப்பட்டது.
.
மகாராஷ்டிராவில் எண்ணற்ற சாதி மறுப்புத் திருமணங்களை
முன்நின்று நடத்தி வைத்தவர் கோவிந்த் பன்சாரே.
அத்தோடு எழுத்தாளரும் கூட.

உண்மையில் சத்ரபதி சிவாஜி யார்?
அவர் மதங்களுக்கு அப்பாற்பட்டு எப்படிச் செயல்பட்டார்?
அவரது படைத் தளபதிகளில் எப்படி சகல மதத்தைச் சார்ந்தவர்களும்
இடம் பெற்றிருந்தார்கள்? என்று
அவர் சிவாஜி குறித்து எழுதிய நூல்
ஏறக்குறைய ஒன்றரை லட்சம் பிரதிகள் விற்பனையானது.
.
தாங்கள் சித்தரித்த சிவாஜிக்கு மாற்றாக மற்றொரு சிவாஜியா?
பொறுக்குமா இந்துத்துவ வெறியர்களுக்கு?
மனைவியோடு வாக்கிங் சென்றவரை
ஆசை தீர சுட்டு தணித்துக் கொண்டனர் தம் தாகத்தை.
மருத்துவ சிகிச்சை பலனளிக்காது மரணத்தைத் தழுவினார் பன்சாரே.
.
மொத்த மகாராஷ்டிராவிலும்
இவ்விதமாக அமைதி நிலைநாட்டப்பட்டது.
.
அது 2015 செப்டெம்பர் மாதத்து இரவு நேரம்
உணவருந்திக் கொண்டிருக்கிறார் முகம்மது அக்லக்.

அவரது குடும்பத்தினர் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள்
என்று சுற்றி வளைக்கிறது மதவெறி பிடித்த கும்பலொன்று.
குற்றுயிராக்கப்படுகிறான் 22 வயது மகன்.

அக்லக்கோ அங்கேயே பிணமாக்கப்படுகிறார்.
.
யார் எதை உண்பது? என்கிற உரிமையைக்கூட இம்மக்களுக்கு அளிக்காத சுதந்திர மண்ணில் Dadriஇருந்து வெகு சுதந்திரமாகப் பிரிந்து செல்கிறது அக்லக்கின் உயிர்.
எல்லாவற்றையும்விட…..

அதிபத்த நாயனார் சிவனுக்கு உணவாக
மீன் அளித்த கதையையும்…..

தனக்குப் பிடித்த கடவுளுக்கு
தனக்குப் பிடித்த பன்றிக் கறியையே
விருந்தாகப் படைத்த கண்ணப்ப நாயனார் கதையையும்…

கேள்வியாவது பட்டிருந்தால்
சக மனிதனைக் கொல்லத் துணியமாட்டார்கள்,

மாட்டிறைச்சி வைத்திருந்தார்கள் என்று
ஒரு அப்பாவி இஸ்லாமிய முதியவரைக் கொல்லும்
நகரமிராண்டிக் கூட்டத்திற்கும்…..

மதிய உணவு வேளையில்
ஊழியர்கள் அசைவம் கொண்டு வரக்கூடாது என்று
சுற்றறிக்கை விடும் நூற்றாண்டைக் கடந்த
The Hindu பத்திரிக்கைக்கும் இருப்பது
”நூலளவு” வித்தியாசம்தான்.

ஆக….
யார் எதை எதைச் சாப்பிடுவது….
எதையெதைச் சாப்பிடக்கூடாது என்பதை
அவரவர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்.

அதைப்போலவே
சங்கர மடத்தில் கருவாடு காய்ச்சச் சொல்ல
எப்படி பிறருக்கு உரிமை கிடையாதோ……

அப்படி….

சங்கிலிக் கருப்பராயன் கோயிலில்
சர்க்கரைப் பொங்கல் வைக்கச் சொல்லவும்….
எவனுக்கும் உரிமை கிடையாது.
.
இந்த உண்மை உரைக்காததால் தான்
காவு வாங்கப்பட்டது முகம்மது அக்லக்கின் உயிர்.

ஆக….

உத்தரப்பிரதேசத்திலும் அமைதி
வெகு அற்புதமாக நிலைநாட்டப்பட்டது.
.
.
இப்படித்தான் தன் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும்
சாதி ரீதியாக இழிவுபடுத்தப்பட்டு
மன உளைச்சல்களுக்கு ஆளான
ஐதராபாத் பல்கலைக் கழக மாணவன் ரோஹித் வெமுலா சாவை Rohitநோக்கித் தள்ளப்பட்டான்.
அவனது சாவுக்குக் காரணமான சாதி வெறியர்களும்
மத வெறியர்களும் தண்டிக்கப்படும்போது
நமது நாட்காட்டிகளில் எத்தனை ஆண்டுகள் கடந்திருக்கும்
என்பது இந்தப் புண்ணிய பூமிக்கே வெளிச்சம்.
.
நாம் ஐதராபத்திலும் இப்படியோர்
”அற்புதமான” அமைதியை நிலைநாட்டினோம்.
.
தமிழகம் மட்டும் சளைத்ததா என்ன?
.
காதல் என்கிற மாபெரும் ”படுபாதகத்தை”ச் செய்துவிட்ட
காரணத்துக்காகவே ரயில் தண்டவாளத்தில் கிடந்தது
நம் இளவரசனது உயிர்.
.
சாதி வெறி கோரத்தாண்டவமாடிய கொடூரப் பொழுதுகளை
தமிழகம் கண்கூடக் கண்டது.

கள்ளம் கபடமற்ற அவ்விளைஞனது
பச்சைப் படுகொலை நம்மைக் குற்ற உணர்ச்சியில்
தலைகுனிய வைத்து மூன்றாண்டுகூட கடக்காமல்
அடுத்த அயோக்கியத்தனமும் அரங்கேறியது உடுமலையில்.
.
சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்ட சங்கர்
கொடூரமாக வெட்டிச் சாய்க்கப்பட்டார் Shankarபட்டப்பகலில்.
தங்கை கெளசல்யாவோ உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

சங்கர் என்கிற அந்த பொறியியல் மாணவன்
ஏன் வெட்டிச் சாய்க்கப்பட்டான்? என்ன காரணம்?

”கெளரவ”க் கொலையாம்.
.
தங்களது கேடுகெட்ட சாதி…
மத நம்பிக்கைகளுக்காக பெற்றவர்களே
தங்கள் பிள்ளைகளைக் காவு வாங்குவதை
கெளரவம் என்று எந்த மடையன் சொல்வான்.?
.
ஆக அமைதியை நிலைநாட்டும் அற்புதப் பணியில்
தமிழகமும் தன் பங்கை செவ்வனே செய்து முடித்தது இவ்விதம்தான்.
.
இன்றோ….
.
மராட்டியத்தின் யுனா.
மாட்டின் தோலை உரித்தார்கள் என்று சொல்லி
தலித் இளைஞர்களை மதவெறியர்களும்
சாதி வெறியர்களும் கொடூரமாகத் தாக்கிய
காட்சிகளைக் கண்டு நாடே குமுறத் தொடங்கி இருக்கிறது.
.
ஆனாலும் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து
தலித் மக்கள் தொடங்கியிருக்கிற யுத்தமோ
அளப்பறிய ஆறுதலையும் அளித்திருக்கிறது.
.
”மாடுதான் உனக்குத் தாயென்றால்….
உன் தாயின் பிணத்தை நீயே அகற்று” என்று
நெத்தியடி முடிவை எடுத்திருக்கிறார்கள்
மராட்டிய தலித் மக்கள்.
.
இது மராட்டியத்தோடு மட்டும் நின்றுவிடக் கூடாது
என்பதே நம் ஆசை.

இத்தனை ஆண்டுகளாய்….

ஒவ்வொரு மாநிலத்திலும்….

ஒவ்வொரு மாவட்டத்திலும்
நாள் தவறாது தொடுக்கப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு
ஒருவழியாகத் தன் திருவாயைத் திறந்திருக்கிறார் மோடி.
.
”தாக்குவதென்றால்
தலித்துகளைத் தாக்காதீர்கள்.
என்னைத் தாக்குங்கள்” என்று.
.
பாவம் அவருக்கு இப்போதுதான்
இது தெரிந்திருக்கிறது.
.
உண்மைதான்
எப்போதாவது இந்தியா வந்து செல்லும்
அவருக்கு இவைகளெல்லாம் தெரிந்திருக்க
நியாயமில்லைதான்.
.
அமைதியை விரும்புகிறார் மோடி.
நம்புங்கள்.
.
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும்
அரிய கலை அவர்கள் அறியாத ஒன்றுதான்.
.
நாட்டில் மதத்தின் பெயராலும்
மாட்டின் பேராலும் நிகழ்த்தப்படும்
கொடூரங்களெல்லாம்
அவர்கள் ஒருபோதும் அறியாத ஒன்றுதான்.
.
காந்தி கொலையில் இருந்து
யுனா வெறித்தனம் வரை
எதிலும் சங்பரிவாரங்களுக்கு சம்பந்தமேயில்லை.
நம்புங்கள்.
.
காந்தியார் கொல்லப்பட்டதுகூட
திப்புசுல்தானால் திட்டமிடப்பட்ட
சதியாக இருக்கலாம்.
.
நம்புங்கள் நண்பர்களே….
.
.
எனக்கு ஏனோ இந்த நேரத்தில்
நினைவுக்கு வரக்கூடாத கவிதை ஒன்று
நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
.
ஏறக்குறைய இருபத்தி ஐந்தாண்டுகள் முன்பு
”பூவுலகின் நண்பர்கள்” அமைப்பு வெளியிட்ட
“மெளனம் உனது எதிரி” என்கிற கவிதை தொகுப்பு
ஞாபகத்துக்கு வந்து தொலைப்பதை
எப்படித் தவிர்ப்பது என்றே தெரியவில்லை.
.
வேறு வழியில்லை.
நீங்களும்தான் அந்தக் கவிதையின்
வரிகளைக் கேட்டுத் தொலைக்க வேண்டும்.
.
இது அமெரிக்க அங்கிளுக்கு மட்டுமல்ல
சகல அங்கிள்களுக்கும் பொருந்தக்கூடிய வரிகள்தான்.
.
இதுதான் அந்த வரிகள்:
.
.
“நீயும் அமைதி பற்றி பேசுகிறாய்.
ஆனால் எல்லோருக்கும் பொதுவான
தாயகத்தின் வளங்களை நீ மட்டும்
தனியே சுரண்டிக் கொள்கிறாய்.
.
நீயும் அமைதி பற்றி பேசுகிறாய்.
ஆனால் உன் சதிச் செயல்களை
மக்கள் மேடைக்கு ஏற்றிய,
உன்னை நியாயத்திற்காக எதிர்க்கத் துணிந்த
தேசத்தின் ஏராளமான இளங்குருத்துக்களை
நீ அநியாயமாகச் சாகடித்தாய்.
.
ஒரு கொடூரமான கழுகு
பாதுகாப்பற்ற, உதவியற்ற
வெண்புறாவை
குறிவைத்துக் குதறுவதைப் போல.
.
ஆமாம்…. நீயும் அமைதி பற்றி பேசுகிறாய்.
ஆனால் உன் இரத்தக்கறை படிந்த கைகளுக்குள் இருக்கும்
பலிகொடுக்கும் பட்டாக்கத்திகளை
முதுகுக்குப் பின்னால் மறைக்கப் பார்க்கிறாய்.
.
நாங்களும் அமைதியையே விரும்புகிறோம்.
.
.
ஆனால்
நீதியின் மீது நிறுவப்பட்ட அமைதியை,
நியாயத்தின் மீது கட்டப்பட்ட அமைதியை.
அது கிடைக்காவிடில்
உன் மீது
நியாயப்போர் தொடுப்போம் நாங்கள்.
.
.
(நன்றி : ”சமரசம்” இதழ்)


எனக்கு செல்போனில் கண்டம்….

$
0
0

Muruganandam
எல்லோருக்கும் எதில் எதிலோ கண்டமென்றால்
எனக்கு செல்போனில் கண்டம்.
.
அதிலும் கட்டுரை அனுப்ப வேண்டிய நாள் என்றால்
செல்போனை அணைத்துவிட்டு
எங்காவது குகைகளைத் தேடி
ஓடி ஒளியவேண்டி இருக்கிறது.
.
இல்லாவிட்டால் எங்கிருந்தோ வரும் அழைப்பு.
“எங்க இருக்கீங்க?”ன்னு.
இருக்கும் இடத்தைச் சொன்னாலோ
தொலைந்தோம்.
.
”அங்கியே இருங்க உங்களப் பார்க்கத்தான்
வந்துகிட்டு இருக்கோம்”ன்னு பதில் வரும்.

அப்புறம் கட்டுரையாவது…..
வெங்காயமாவது…..
இதற்கிடையில் ரத்தக்கொதிப்போடு ஜனனம்
ஆசிரியர்வேறு நம்ம ஒலக மகா கட்டுரை
மெயிலில் வருகிறதா என்று
வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருப்பார்.
.
நண்பர்கள் வந்துவிட்டார்கள் என்றால்
அப்புறம் மெயிலாவது….
மயிலாவது….
அப்படித்தான் இன்றும்.
.
ஆனால் இன்றைய விருந்தினர்களோ
தவிர்க்கமுடியாதவர்கள்.
.
.
தவிர்க்க முடியாத நண்பர் ஒன்று:
==================================
முதலில் வந்த நண்பர் ஓர் அற்புதமான ஆய்வாளர்.
முனைவர் திருநீலகண்டன்.
திருநெல்வேலியில் உள்ள “மதுரை திரவியம் தாயுமானவர்
இந்துக் கல்லூரி”யில் பேராசிரியர்.

அவர் பேசப் பேச ஒவ்வொன்றும்
புதிய புதிய தகவல்களாக வந்து விழும்.

அவரது பேச்சுக்கு ஒரு சின்ன விளம்பர இடைவேளை
விட்டு ஆசிரியரை அழைத்து
”இன்றைக்கு கட்டுரை கிடைக்க ரெண்டு மணியாயிரும்”ன்னு
கொதிப்பைக் குறைத்தேன்.
.
முனைவர் நீலகண்டன் கி.மு.ஒன்றாம் நூற்றாண்டில்
ஒரிசாவில் கிடைத்த ஹதிகும்பா கல்வெட்டு
குறித்து கதைக்க ஆரம்பித்தார்.

அவர் சொன்ன தகவல்களைக் கேட்டு
ஆச்சர்யத்தில் உறைந்து போனேன்.
(ஆமா… இந்த ”றை” கரெக்ட்டா….
இல்ல இந்த “ரை” போடணுமா?ன்னு
நீங்களே முடிவு பண்ணிக்குங்க)
.
சுமார் 113 ஆண்டுகள் தங்களை அச்சுறுத்திய
தமிழ் மன்னர்களது கூட்டமைப்பைப்
பற்றிப் பேசுகிறதாம் அந்தக் கல்வெட்டு.
லிபி மொழியில் எழுதப்பட்டிருந்தாலும்
அந்தக் கோண்டு இன மக்களும்
திராவிடர்கள்தான் என்றார் ஆய்வாளர்.
.
அட அங்கெங்கீங்க இருக்காங்க
திராவிடர்கள்? என்றேன்.

“இன்னொன்னு தெரியுமா….
மத்தியப் பிரதேசத்துல இராவணனை வழிபடும் மக்கள்
இன்னமும் இருக்கிறார்கள்.
அவருக்குக் கோயில்கூட இருக்கிறது.” என்று
மேலும் ஆச்சர்யத்தினை ஊட்டினார்.
.
அப்படீன்னா….
திருஞானசம்பந்தரை “திராவிட சிசு”
என்றாரே சங்கரர்? என்றேன்.
.
அவர் தமிழில் எழுதியதாலேயே
அவரை ”திராவிட” என்றழைத்தார்கள் என்று
மேலும் போட்டுத்தாக்கினார்.

இரண்டாவது முறையாக தேநீர் வைத்துக் கொண்டு
வந்து கொடுத்தான் நண்பன் மயூர்.
.
” ’வேதம் பகுவிதம்….
அதில் திராவிட வேதமும் ஒன்று’……
.
மிகச் சிறந்த ஆய்வாளரான நம்ம
தொ.பரமசிவன் அடிக்கடி சொல்வாரே….
இந்துன்னு நம்பிகிட்டிருக்குற
நூத்துல தொண்ணூறு பேருக்கு
உண்மையில மதம் கிடையாது.

சாமி கும்புடுவான்….
வழிபாடு நடத்துவான்….
ஆனா சமயம்கிற சட்டகத்துக்குள்ள
அடங்கமாட்டான்.
.
த்ரமிளம் என்பதுதான்
பிற்பாடு தமிழ்…
தமிழம்….
த்ராவிடம் என்று திரிந்திருக்கிறது.

இந்த உண்மையை இன்றைக்கு
மலையாளியோ…
தெலுங்கனோ….
கன்னடனோ ஒத்துக் கொள்ளாமல் போகலாம்.

ஆனால்…. என்றைக்கு அவர்களுக்கு
இந்தியாலும் இன்னபிற சமாச்சாரங்களாலும்
ஆபத்து உச்சத்தில் வந்து நிற்கிறதோ
அன்றைக்குத்தான் நம்மைத் திரும்பிப் பார்ப்பான்.
அப்போதுதான் நம்மருகே வந்து நிற்பான்.
.
அதுவரைக்கும் இந்த “திராவிடர்” என்கிற அகல் விளக்கை
அழியாமல் பார்த்துக் கொள்ளவேண்டிய பொறுப்பு
நம் தமிழர்களுக்கு இருக்கிறது.” என்று
தங்கு தடையில்லாமல் வந்து விழுந்த
சொல்லருவியில் திக்குமுக்காடிப் போனேன்.
.
அய்யோ இந்த ஜென்மம்….
ச்சே…. ஜனனம் எடிட்டர் வேறு
பரபரப்பில் இருப்பாரே என்று
செல்போனில் மணி பார்த்தேன்.
.
”இப்படிப் பேச நாள்கணக்கில் விஷயம் இருக்கிறது.
இன்னொரு முறை நிம்மதியாப் பேசுவோம்…” என்று
கிளம்பியவரை வழியனுப்பப் போனால்
வாசலில் அடுத்த ஆள்.
Thiruneelakandan
.
.
தவிர்க்க முடியாத நண்பர் இரண்டு:
=====================================
அது : நண்பன் வீணை மைந்தன்.

என் அன்புத் தோழர் மணிவண்ணனால்
அறிமுகமான தம்பி.
அவரது நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ. படத்தின்
துணை இயக்குநர்.

தனது தங்கை லின்ஸியின் திருமண
அழைப்பிதழைக் கொடுப்பதற்காக வந்திருந்தான்.
அழைப்பிதழைப் பிரித்த எனக்கு
அங்கேயும் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது.
.
சாதி மறுப்பு… மத மறுப்பு…. என்பதோடு
இனக்கலப்பு என்கிற மற்றுமொரு செய்தியையும்
அந்த அழைப்பிதழ் சுமந்து வந்திருந்தது.
“என் கல்யாணத்துக்கும் வரல…
பொண்ணு பொறந்ததுக்கும் வரல…
இதுக்காவது வருவியா தலைவா?” என்றான்
கடுப்புடன் வீணை.
.
”சாதி மறுப்பு… மத மறுப்பு…ன்னு சொல்லீட்டே
வராம இருப்பனா?” என்றேன்.
.
மீண்டும் ஒரு தேநீர் வந்து சேர
எனக்கு மீண்டும் கட்டுரை எழுத
வேண்டிய ஞாபகம் வந்தது.

பேச்சு அப்படியே சினிமா பக்கம் திரும்பியது.
“கபாலி பாத்தியா தலைவா?” என்றான்.

”நான் கடைசியாய் பார்த்த
ரஜினி படம் படையப்பா” என்றேன்.

மூணு வருஷம் முன்னாடி வந்த
”இதற்காகத்தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா”
படத்தையே போனமாசம்தான் பார்த்தேன்.
செம சூப்பரா இருந்துச்சு என்றேன்.

எனது அபாரமான சுறுசுறுப்பை மனதுக்குள் மெச்சியபடி…..
.
”சரி என் பொண்ணு காலேஜ்ஜுல
சேர்றதுக்குள்ள வந்து பாத்துருவீங்கல்ல…”
என்றான் தம்பி நக்கலாக.
.
”வீணை அந்தப்படத்துல வர்ற….

”ப்ரெண்டு….

லவ் ஃபெயிலியரு…

ஃபீல் ஆயிட்டாப்பல….

ஹாஃப் அடிச்சா போதும்…

கூல் ஆயிருவாப்பல….”ன்னு வர்ற சீனை
எத்தனை முறை பார்த்தாலும்
சலிக்காது போலிருக்கே…” என்றேன்.

“அந்த சீன்ல நடிச்ச நண்பன்கூட
பேசறீங்களாண்ணே….?” என்றபடி
இங்கிருந்தே போனைப் போட்டான் வீணை.
.
அந்த முனையில் பேசியதோ…..

“வாங்க ஜி…..

வாங்க ஜி….

அப்டியே காதுக்குள்ள உங்க வாய வெச்சு
ஃபிரெஷ்ஷா இன்னொரு தடவ சொல்லுங்க ஜி”

என்று படத்தில் தூள் கிளப்பிய முருகானந்தம்.
.
2013ல வந்த படத்துக்கு 2016 ல பாராட்டுகிற
ஒரே ஆள் நானாகத்தான் இருக்கும் என்று சொல்லி
படத்தையும் அவரையும் மனம் திறந்து பாராட்டினேன்.

புதிய படம் ஒன்றை விரைவில்
இயக்குகிறாராம் முருகானந்தம்.
மனமார்ந்த வாழ்த்துக்களைச் சொல்லிவிட்டு
அலைபேசியை நண்பனிடம் கொடுத்து விட்டு
மணியைப் பார்த்தேன்.
.
மதியம் 3.30.
.
.
இந்நேரம் உலகில் உள்ள
சகல கெட்டவார்த்தைகளையும் சேர்த்து
என்னைத் திட்டிக்கொண்டிருக்கலாம்
நீங்கள் படித்துக் கொண்டிருக்கும்
இந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர்.
.
என்ன செய்ய?
.
நான் ஏற்கெனவே சொன்னபடி
எல்லோருக்கும் எதில் எதிலோ கண்டமென்றால்
எனக்கு செல்போனில் கண்டம்.
.
.
அப்ப…
நான் உத்தரவு வாங்கிகிட்டுங்களா…..?
.
.
( “ஒரு தற்குறியின் நாட்குறிப்புகள்” ஜனனம் வார இதழ் )


சாகவாவது விடுங்கப்பா…

$
0
0

Declaration
===========
Hereafter I’m not going to
write or speak in Tamil.
If I begin to talk with somebody they just say…
.
“yeah… this is from that movie or this movie….”.
.
These guys are totally irritating me
by comparing my words with
some Tamil movies.
.
How can one Tamil writer tolerate or digest
these kind of rubbish behaviors.
So I decided to stop writing in Tamil.
===============
ajith
.
பின்ன என்னங்க…
.
எவன் கிட்டயும் ஒரு வார்த்தை
வாயத் தெறந்து பேசமுடியல.
எதச் சொன்னாலும் சினிமாவுலயே போயி
நிக்குறானுக கெரகம் புடிச்சவனுக.
surya
.
”சிறப்பு…..”ன்னா
“அப்பா” சமுத்திரக்கனியா?ங்குறான்….
.
”மகிழ்ச்சி…”ன்னா
“கபாலி” ரஜினியா?ங்குறான்….
.
”நன்றி தோழர்…”ன்னா
ஜோக்கரா?ங்குறான்….
.
ச்சே…. முடியல.
hitslink.blogspot.com
.
.
மொட்டையடிச்சா
“சேது” மாதிரிங்குறான்….
.
ஒட்ட வெட்டுனா
“காக்க காக்க” மாதிரிங்குறான்….
.
ஷேவ் பண்ண காசில்லாமச்
சுத்துனாலும்
“உங்க சால்ட் அண்ட் பெப்பர் லுக்கு
சூப்பரூ…”ங்குறான்….
.
பிச்சை எடுக்கப்போனா கூட
“நான் கடவுள்”ல வர்ற மாதிரியே
இருக்கூ…”ங்குறான்.
.
kapali
.

யப்பா சாமிகளா….
எங்கள வாழத்தான் விடல….
நிம்மதியா சாகவாவது விடுங்கப்பா…..
அப்புறம் அதுக்கும்
அந்தப் படத்துல செத்த மாதிரியே செத்தான்…ன்னு
சொல்லீராதீங்க

.
naan-kadavul
கொஞ்சம் உட்டா
”திருவள்ளுவரையே நாங்கதான்
அறிமுகப்படுத்துனோம்”ன்னு
இந்தக் கோடம்பாக்கம் பக்கீஸ்
சொல்லுங்க போலிருக்கே.?
.
No… This is too bad.
.
.
( “டுபாக்கூர் பக்கங்கள்” குமுதம் வார இதழ்)


இந்த ராதா கிச்சுலயும் வெங்காயம் வைக்கல….

$
0
0

radha2
நடிகை ராதாவின் பரமரசிகன் நான்.
அவரது ஒவ்வொரு படங்களையும்
கண்டு மெய்சிலிர்த்திருக்கிறேன் நான்.
.
ஆனால்….
சமீபகாலமாக அவர் படும்பாடு
சொல்லி மாளாதது.
அவர் படும் துயரம் என் கண்களில் இருந்து
தாரை தாரையாக கண்ணீரை வழிய வைக்கிறது.
.
“என் கணவரை அபகரிச்சிட்டார் ராதா….
மீட்டுக் குடுங்க என் மணாளனை”ன்னு
உமாதேவின்னு ஒரு பொண்ணு புகார் குடுக்க….
.
“அவுரும் நானும் சின்னவயசுல
குண்டு விளையாடுற காலத்துல
இருந்தே பழக்கம்.
அதைத் தப்பா புருஞ்சுகிட்டு
புகார் குடுத்துடுச்சு அந்தப் பெண்.
.
இதுக்குக் காரணம்
நான் புழல் சிறையில் ஏழு ஆண்டுகள்
சேர்ந்து வாழ்ந்த அடச்சே….
என்னோடு ஏழு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து
இப்போது புழல் சிறையில் இருக்கும்
தொழில் அதிபர்தான்.
அவர் தூண்டிவிட்டுத்தான் இந்தப் புகாரைக்
கொடுத்திருக்கிறார் உமா.” என்று
நடிகை ராதா பதிலடி கொடுத்தார்.
.
அத்தோடு நிற்காமல் நெத்தியடியாய்
இன்னொன்றையும் சொன்னார்
என் அபிமானத் தாரகை ராதா.
.
“அவர் கணவரை அபகரித்து
வைத்துக் கொள்ளும் அளவுக்கு
அவர் முகேஷ் அம்பானியும் அல்ல.
அவரை நான் காதலிக்கும் அளவுக்கு,
அவர் பெரிய மன்மதனும் அல்ல.” என்று.
.
அவர் படும் பாட்டைப் பார்த்து
பத்து நாளா சோறு தண்ணிகூட
உள்ள இறங்காம தவிக்கிறதப் பார்த்துட்டு
”கலாரசனையத்த கந்தன்”…தான் கேட்டான்.

“உனக்கு என்னப்பா பிரச்சனை?”ன்னு.
.
இப்புடி இப்புடி…ன்னு விலாவாரியாச் சொன்னா…
.
இப்ப இதுவாயா தலையாய
பிரச்சனைங்குறான் அந்தக் கூறுகெட்டவன்.
.
“ஏம்ப்பா கந்தா…
எம்மாம் பெரிய நடிகை அவுங்க….
நான் கொழந்தையா இருக்குறப்போ
வந்த ”அலைகள் ஓய்வதில்லை” படத்துல
ஸ்கூலுக்குப் போகாம இருக்குறதுக்காக
இவுங்குளும் கார்த்திக்கும்
கிச்சுல வெங்காயத்தை வெச்சுகிட்டு
பரண்ல படுத்திருப்பாங்களே
காய்ச்சல் வர்றதுக்காக.

அந்த சீனைப் பார்த்தே
காய்ச்சல்ல படுத்தவன்யா நானு.

அதுவுமில்லாம நம்ம தலைவர் மணிவண்ணன்
படத்துலகூட….
”உன் புருசன்ந்தான்….
ஒனக்கு மட்டும்தான்”ன்னு பாட்டுப்பாடி
புருசனையே ஒப்படைச்சவங்கய்யா
நம்ம ராதா.
radha1
சினிமாவுலயே அடுத்தவங்க புருசனை
அபகரிக்க மனசு வராதவங்க
எப்படிப்பா நெசவாழ்க்கைல
இப்படிப் பண்ணுவாங்க?”ன்னு… குமுறித் தீர்த்தா….
.
கொலை வெறில நிக்குறான்
”கலாரசனையத்த கந்தன்.”
.
”யோவ் லூசு….
இந்த ராதா கிச்சுலயும் வெங்காயம் வைக்கல….

டிச்சுலயும் வெங்காயம் வைக்கல…

நீ சொல்ற ராதா
பேரன் பேத்தியோட
நல்லா இருக்காங்க.

அம்பிகாவோட தங்கச்சி ராதாவ சொல்ற நீ.
இது சுந்தரா டிராவல்ஸ் ராதா….

புரிஞ்சுதா….
உன்னமாதிரி துப்புக்கெட்டவன் எல்லாம்
சினிமா விமர்சனம் பண்ண வந்தா
இப்படித்தான் இருக்கும் பொழப்பு….”ன்னு
காரித் துப்புறான்.
.
.
ஓ…..
சாரி….
நாமதான் கொஞ்சம் அப்டேட் பண்ணிக்காம
விட்டுட்டமோ?
.
.
radha-latest
( “டுபாக்கூர் பக்கங்கள்.” குமுதம் வார இதழ் )



நியூட்டனின் முன்னோடி நமீதா…

$
0
0

”எழுத்தறிவித்தவன் இறைவன்”னு சும்மாவா சொன்னாங்க?
.
அதுவும் சைதாப்பேட்டை பள்ளியில் உள்ள
“இறைவன்”களின் திருவிளையாடல் பார்த்து
புல்லரிச்சுப் போச்சு.
.
அட…. ”திருவிளையாடல்”ன்னதும்
நீங்க எதுவும் ஏடாகூடமா யோசிக்க வேண்டாம்.

சி.பி.எஸ்.சி மேதைகளை உருவாக்கித் தரும்
அப்பள்ளியின் கேள்வித்தாள் எந்த லட்சணத்தில்
இருக்கிறது என்பதற்கான சேம்பிளை
என் தோழி கீதாஞ்சலி அனுப்பி
இருந்ததைப் பார்த்ததும்
அடிவயிறு கலங்கி விட்டது.
.
அதில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள்
ஒவ்வொன்னும் ஓகோ ரகம்.

அதைப் படிப்பதற்கு முன்
நீங்கள் எதற்கும் 108 ஆம்புலன்சுக்கு
ஒரு போனைப் போட்டுவிட்டுப் படிப்பது நல்லது.
.
அதிரடி கேள்வி ஒன்று :
=======================
அனுஷ்கா வகுப்பில்
மொத்தம் 304 மாணவர்கள்.
பள்ளி சுற்றுலாவிற்காக ஒவ்வொருவரும்
80 ரூபாய் தருவதாக ஒப்புக் கொண்டார்கள்.

அப்படியானால் கிடைக்கும்
மொத்த ரூபாய் எத்தனை?
.
.
அதிரடி கேள்வி இரண்டு :
=========================
kajalகாஜல் மூன்று ஒற்றைப்படை
எண்களைச் சேர்த்து வரும் எண்ணிக்கை 100.

காஜலின் கணக்கு எப்படி
நட்டுகிட்டுப் போச்சு என்று நிரூபி.
.
.
.
.

அதிரடி கேள்வி மூன்று :
=======================
சூர்யாவின் நீளம் 16 மீட்டர்.
அகலம் 4 மீட்டர்.
நிலத்தின் வடிவம் செவ்வகம்.
.
கார்த்திக்குடையதும்
அதே அளவுதான்.
ஆனால் நிலமோ சதுரம்.
.
karthickஅப்படியானால் கார்த்திக் நிலத்தின்
பரிமாணம் என்னவாக இருக்கும்?
.
.
.
.

அதிரடி கேள்வி நான்கு :
=======================
சமந்தாவுக்கு இருப்பது
5054 ஆப்பிள்கள்.

இவை ஜனவரியிலும் பிப்ரவரியிலும்
தோட்டத்தில் விளைந்தவை.
samanthaஅதில் ஜனவரியில் மட்டும்
சமந்தாவிடம் 2060 ஆப்பிள்கள்.

எனில், பிப்ரவரியில் மட்டும்
சமந்தா தோட்டத்தில்
எத்தனை ஆப்பிளை ஆட்டையைப் போட்டிருப்பார்கள்?
.
.
பாஸ்…
என்ன தலை கிறுகிறுன்னு வருதா?
இருங்க…. இருங்க…. மொதல்ல
இந்தத் தண்ணியக் குடிங்க….
இதுக்கே கலங்குனா எப்படி?
.
இன்னும் அரவிந்த்சாமில இருந்து
சந்தானம் வரைக்கும் ஏகப்பட்ட
கேள்விகள் மிச்சம் இருக்கு….
அதையும் பாத்திருவோம்…
.
ஆனா ஒன்னு மட்டும் உறுதி…..
.
இது இப்படியே போச்சுன்னா….
.
நாளைக்கு நியூட்டனுக்கு முன்னாடியே
புவியீர்ப்பு விதியைக் கண்டுபிடிச்சவர்
நமீதான்னும்….
.
.
டார்வினின் பரிணாம வளர்ச்சிக்கு பின்னாடி
டாப்ஸிதான் இருந்தாங்கன்னும்
எழுதப் போறாங்க இந்தப் பள்ளிக்கூடப் பசங்க.
tapsee
.
எதுக்கும் எச்சரிக்கையா இருங்கப்பு.
.
.
( “டுபாக்கூர் பக்கங்கள்” குமுதம் )
question-paper


“இவர் மரித்தும் பேசுகிறார்”

$
0
0

lazy_cartoon
வாழ் நாளில் எதையும்
உருப்படியாகச் செய்ய மாட்டேன்
போலிருக்கிறது.
.
ஒரு நல்ல புத்தகமா ?
அது வெளிவந்து நாற்பதாண்டுகள்
கழிந்த பின்னரே படிக்கத் தொடங்குகிறேன்.
.
ஒரு நல்ல மனிதரா
அவருடைய தள்ளாத வயதிலேயே
தொடங்குகிறது எனக்கும் அவருக்குமான தோழமை.
.
ஒரு நல்ல திரைப்படமா?
ஊரே உச்சி முகர்ந்து கொண்டாடிக் கழித்து
கணக்கற்ற ஆண்டுகள் ஆன பின்னரே
காண்கிறேன் அதை.
.
இதில் வாழ்நாள் என்று எதைச் சொல்வது ?
அதுவும் ஐம்பதைத் தொட்ட பின்னர்?.
நல்லவைகளை தள்ளிப் போட்டுக் கொண்டே
போவது பிறவி நோய்தான் எனக்கு.
ஆனாலும் அவைகளை எட்டாமல்
விட்டுவிட மாட்டேன் என்கிற
நம்பிக்கைகளுக்கு மட்டும் குறைச்சலில்லை எனக்குள்.
.
அப்படித்தான் புயலிலே ஒரு தோணி நாவலாகட்டும்…
சற்றும் முன் பார்த்துமுடித்த
லைஃப் ஈஸ் பியூட்டிப்ஃபுல் (Life is Beautiful) படமாகட்டும்…..
”சுறு சுறுப்புச் சிகரம்” எனப் பட்டமே வழங்கலாம் எனக்கு.
.
அனைத்து அற்புதங்களையும்
வாசித்துவிட… கண்டுவிட….
இந்த ஆயுள் போதுமானதுதானா?
எனக்குமட்டுமில்லை எவருக்கும் போதாது
என்கிற உண்மை உறைக்கிறது.
ஆனால் காலம் கடந்தேனும் வாசிப்பேன்…
சந்திப்பேன் என்கிற அடங்காப் பிடிவாதம் மட்டும்
என்னுள் அடங்குவதேயில்லை.
.
இந்தவேளையில்
பாளையங்கோட்டை இங்கிலீஷ் சர்ச்சில்
பள்ளி கொண்டிருக்கும் ஹென்றி பவரது (Henry Bower)
கல்லரையில் எழுதப்பட்டிருக்கும்
வாசகம்தான் நினைவுக்கு வருகிறது.
.
(இன்றைக்கு ஆலயத்தில் தொழுபவர்கள்
சுமந்து செல்லும் பிழை நீக்கப்பட்ட
அந்த வேதாகமம் இவரது மொழிபெயர்ப்புத்தான்….)
.
மிகச் சரியாக 131 ஆண்டுகளுக்கு முன்னர்
புதைக்கப்பட்ட அவரது கல்லரை மேல்
“இவர் மரித்தும் பேசுகிறார்” என்று
தமிழில் எழுதப்பட்டிருக்கிற வாசகத்தினைப் போல
ஒருவேளை நான் மரித்தும் வாசிப்பேனோ?
.
”முதல்ல ….டீட்டு வாசி.
ஆனால்…. தயவுசெய்து பேசாதே” என்கிற
ஒரு அசரீரி கேட்கிறதே….
.
அது யாருடையதாக இருக்கும்?
.
.


கற்றது தமிழ்

$
0
0

ellis-photo1
என்றேனும்….
சென்னையிலுள்ள எல்லீஸ் சாலையில்
நடந்தோ…. ஆட்டோவில் கடந்தோ…..
போகும்போது யோசித்திருக்கிறேனா?
.
யார் இந்த எல்லீஸ்?
.
எதற்காக சம்பந்தமேயில்லாமல்
தமிழகச் சாலை ஒன்றிற்கு இந்தப் பெயர் என்று?
.
வெட்கமாக இருந்தது எனக்கு.
.
சில வருடங்கள் முன்பு வெளிவந்த
“திராவிடச் சான்று” என்கிற நூலைப் படிக்கும்வரை.
.
அப்போதுதான் தெரிந்தது
இந்த வீணாப் போன ”வந்தேறி” வெள்ளக்காரன்
தமிழ்நாட்டில் வந்திறங்கி
தமிழ் மீது கொண்ட காதல் கதை.
.
பச்சையாச் சொல்லனும்ன்னா….
“திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்”ன்னு
எழுதிய கால்டுவெல்லுக்கு
நாற்பதாண்டுகளுக்கு முன்னமே
தமிழின் பெருமையைப் பறையடித்துச் சொன்னவன்தான்
இந்த எல்லீசன்.
.
இந்தியா என்கிற நாடு உருவாவதற்கு முன்னமே
தமிழ் நாட்டைக் கண்டுணர்ந்தவன் அவன்.
.
அதனால்தான் தனது சக வெள்ளையர்களுக்குச் சொன்னான் :
“ஆங்கிலேய அதிகாரிகள்
தென்னிந்திய மொழிகளின் அடிப்படையை
முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

அதிலும் குறிப்பாக தமிழை….
அதுதான் மற்றவற்றுக்கெல்லாம் மூலமே….” என்று
பொட்டில் அடித்துச் சொன்னான் எல்லீசன்.
.
இந்த மனிதன்தான்
சென்னை கோட்டையில் உள்ள
செயிண்ட் ஜார்ஜ் கல்லூரியையே நிறுவியவன்.
அதாவது 204 ஆண்டுகளுக்கு முன்பு.
.
அத்தோடு நிற்காமல்
அங்கொரு அச்சகத்தையும் நிறுவி
தமிழ், தெலுங்கு எழுத்துருக்களை
உருவாக்கக் காரணமாக இருந்த மனிதன்.
.
அந்த மனிதனின் உழைப்பில்
உருவானதன் தொடர்ச்சிதான்
நான் எழுதும் இந்த மொக்கை எழுத்தையும்
நீங்கள் இன்றைக்கு வாசித்துக் கொண்டிருப்பது.
.
சரி…
.
இதற்கு மேல் நீட்டிப்பது உங்களுக்கும் பிடிக்காது….
.
எனக்கும் பிடிக்காது….
.
அந்த மனிதன்தான்
சென்னையில் குடிநீர்ப்பஞ்சம் வந்தபோது
சென்னையைச் சுற்றி இருபத்தி ஏழு கிணறுகளை உருவாக்கியவன். உருவாக்கியதோடு நிற்காமல்
கிணற்றின் சுற்றுச் சுவர்களில்
திருக்குறளை செதுக்கி வைத்தவன்.
அவன் தான் அன்றைய சென்னை கலெக்ட்ராக இருந்த
இந்த எல்லீசன்.
.
அத்தோடு நிற்காமல்
திருவள்ளுவரின் உருவம் பொறித்த
தங்க வராகன்களை உருவாக்கியவன்.
.
என்னடா இவன்……
எல்லீஸ் என்று ஆரம்பித்து
எல்லீசன் என்று எழுதிக் கொண்டிருக்கிறானே…
ஒருவேளை இவன் ஒரு தமிழ் பைத்தியமாக இருப்பானோ
என்று நீங்கள் எண்ணினால்…..
.
Exactly You are Correct….
.
ஆம்..
.
அவன் தமிழ் மீது கொண்ட காதலால்….
”என் பெயரை ஒருபோதும் எவரும்
எல்லீஸ் என்று அழைக்கக் கூடாது.
.
என் பெயரை என்றும் எவரும்
தமிழின் ஒலிநயத்திற்கேற்ப….
எப்போதும் எல்லீசன் என்றே அழைக்க வேண்டும்….” என்று சொல்லி இராமநாதபுரத்தில் தனது
நாற்பத்தி ஒன்றாம் வயதில் செத்துப் போனான்.
.
ஆனால் நாமோ…
.
கடைக்குப் பெயர் வைத்தாலும்… சரி….
.
குழந்தைக்குப் பேர் வைத்தாலும்…. சரி…
.
அம்மாஸ்…
.
பாட்டீஸ்….
.
ஆச்சீஸ்….என்றும்…..
.
“ஸ்”ஐயும்
”ஜ்”ஜையும்
“ஷ்”யையும் வைத்துப் பெயர் சூட்டிக் கொண்டிருக்கிறோம்….
.
எங்கிருந்தோ வந்து…….
தமிழ்மீது காதல் கொண்டு
எல்லீஸ் ஆக இருந்து எல்லீசன் என்றாகி……
அநாதையாகச் செத்துப்போன
எல்லீசன் எங்கே?
.
நாமெங்கே?
.
.
valluvar-coin1
( “டுபாக்கூர் பக்கங்கள்” குமுதம் வார இதழ் )


மம்மி ரிட்டர்ன்ஸ்…

$
0
0

mummy-two

வீட்டில் திருவிழா என்று சொன்னால்
அது உறியடித் திருவிழாவோ….
அல்லது உடுக்கையடித் திருவிழாவோ
எல்லாம் அல்ல.
அது எலியடித் திருவிழாதான்.
.
வீட்டுக்குள் ஒரு ஒத்தை எலி தென்பட்டுவிட்டால் போதும் .
அம்மா ஊரைக் கூட்டிவிடும்.
ஏதோ மலைப்பாம்பு வீட்டுக்குள் புகுந்துவிட்ட
ஃப்பீலிங் அதற்கு.
.
எலியை வீட்டுக்குள் வைத்து
வெளியில் தாள் போட்டுவிட்டு
வாசலில் வந்து நின்றுவிடும் அம்மா.
நானோ அப்பாவோ வரும்வரைக்கும்
வாசலில்தான் தவம்.
.
கூண்டு வைத்துப் பிடிக்கலாம் என்று
பிளான் பண்ணி….
கூண்டுக்குள் உள்ள கொக்கியில்
சின்ன தேங்காய்த் துண்டை மாட்டி வைத்து
மேதகு எலியார் வரும்வரை காத்திருப்போம்.
ஏதோ ஒரு அதி அற்புதப் பொழுதில்
“டப்” என்று சத்தம் கேட்கும்.
.
அவ்வளவுதான்.
அது அர்த்த ராத்திரியாய் இருந்தாலும் அலறும்….
“டேய் எலி மாட்டீடுச்சு….
எடுத்துப் போடுங்கடா” என்று.
இந்த “டா” அப்பாவுக்கும் சேர்த்துத்தான் போலும்.
.
ஏதோ சிறுத்தையைப் பிடித்த தெனாவெட்டில்
எலிக்கூண்டை எடுத்துக் கையில் கொடுப்பார் அப்பா.
தூக்கக் கலக்கத்தில் எழுந்து வாங்கிக் கொண்டு போய்
வெளியில் கூண்டைத் திறந்து எலியைத் துறத்திய
கையோடு மூச்சா போய்விட்டு உள்ளே திரும்புகையில்
எனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கும் அதே எலி.
.
”இந்தப் படுபாவிய பெத்துத் தொலைச்சதுக்கு…”ன்னு
அதையொட்டித் தொடங்கும் அம்மாவின் ”கச்சேரி”.
அது அடுத்த நாள் மாலை வரைகூட நீள்வதுண்டு.
.
சில வேளைகளில் அம்மாவை வேறொரு அறையில் தள்ளி
கதவைச் சாத்திவிட்டு அப்பாவும் நானும்
ஆளுக்கொரு விளக்குமாற்றை எடுத்து
கட்டலுக்கடியில்…. பீரோ சந்தில் என
எலிவேட்டையில் இறங்குவதும் உண்டு.
.
எலி உலவும் இடம் தவிர
பிற இடங்களில் எல்லாம் ”சொத்” “சொத்”தென்று
விளக்குமாற்றால் வெளுப்போம்.

வெற்றிவீர்ர்களாக வெளியில் வருவோம்
என்கிற எதிர்பார்ப்பில் காத்திருக்கும் அம்மாவுக்கு
கடைசியில் இருந்த இரண்டு விளக்குமாறும்
அக்கக்காய்ப் பிய்ந்து போன கதை தெரியும்போது….
.
“நான் பெத்ததும் செரியில்ல….
நான் கட்டுனதும் செரியில்ல….
நான் வாங்கீட்டு வந்த வரம் அப்படி…”ன்னு
அடுத்த தலைப்பில் ஆரம்பமாகும்
”சங்கீத சாம்ராட்”டின் அடுத்த ”ஆலாபனை”.
.
இப்போது அப்பாவுக்குப் பிறகு
”முழுப் பொறுப்பும்” என் வசம் வந்துவிட்டது.
.
இப்படித்தான் போனவாரம் “புதிய விருந்தினர்”
ஒருவர் திடீர் வருகை தர….
அம்மாவிடம் இருந்து அழைப்பு….
.
”டேய் நம்மூட்ல எலி பூந்துடுச்சுடா…” என்று.
அலறியடித்துக் கொண்டு போனேன்
அஞ்சாறு நாள் கழித்து.
.
போன மறுகணமே “எங்க அது…? எங்க சுத்துது அது?” என்றேன்.
.
”இதோ…. அந்த பீரோ மேல ஏறுது…
டீ.வீ.மேல குதிக்குது….
அந்தத் துணி காயப் போடற கம்பி மேல உக்காந்துகிட்டு
என்னையவே பாத்துகிட்டு இருக்குது…”
என்கிற ரன்னிங் கமெண்ட்ரி வேறு.
.
ஏதாவது சாப்புட்டுதா என்றேன்…
.
“நான் சாப்புட்டனா இல்லையான்னு கேக்காதே….
அது சாப்புட்டுதா இல்லையான்னு கேளு….
உன்னப் பெத்ததுக்கு….”ன்னு மீண்டும் கச்சேரியைத் தொடங்க….
.
அய்யோ மறுபடியும் ஆரம்பிச்சறாதே….
இரு….. இப்ப கூண்டு வாங்கீட்டு வரட்டா…..?

”அத வாங்கீட்டு வந்து
நீ புடிக்கற லட்சணம் தெரியும் எனக்கு.
வேற ஏதாவது வழியிருக்கா பாரு…..”ன்னது.
.
நண்பர்களிடம் போனைப் போட்டு விசாரித்தேன்.
ஆளுக்கு ஒரு வழியைச் சொன்னார்கள்.
.
”கேக் மாதிரி ஒன்னு விக்குது.
அத வாங்கீட்டு வந்து வெச்சுட்டாப் போதும்….
விஷம் கலந்த அதைச் சாப்பிட்டுட்டு
எலி எங்கியோ போய்ச் செத்துப் போயிரும்”
என்றான் நண்பன்.
.
“அந்தச் சனியன் சாப்புட்டு முடிச்ச கையோட
பீரோவுக்குப் பின்னாடியோ….
உங்கப்பாவோட பழைய பொட்டிகளுக்கு நடுவயோ
போயி செத்துப் போச்சுன்னா….
அந்த நாத்தத்துல நான் போயிருவேன்….
அத எப்புடிக் கண்டுபுடுச்சு தூக்கிப் போடறது?” என்று
எடுத்ததுமே Reject செய்துவிட்டது தாயெனும் ”தெய்வம்”.
.
அதுவும் சரிதான்…..
இப்ப என்ன செய்ய….?
மறுபடியும் ஒரு ஸ்பெசலிஸ்ட்டுக்குப் போனைப் போட….
.
“தலைவா… அம்மா சொல்றது கரெக்ட்டுதான்.
ஆனா இப்ப புதுசா ஒன்னு வந்திருக்கு….
சின்ன கேரம்போர்டு மாதிரி இருக்கும்….
அதுல விஷம் கலந்த உணவு இருக்கும்….
எலி வந்து சாப்பிட்டாச்சுன்னா….
காலுல பசை ஒட்டிக்கும்…
விஷம் வேல செய்யும்….
காலைத் தூக்க முடியாது….
அப்புடியே செத்து நிக்கும்…..
ஆப்பரேஷனும் சக்சஸ்….
பேஷண்ட்டும் அவுட்…. எப்புடீ?”ன்னான்.
.
எனக்குக் குழப்பமாக இருந்தது.
.
அம்மா சொன்ன எலியோட
சாமுத்ரிகா லட்சணங்களைக் கேட்டா….

அதை எலின்னும் சொல்ல முடியாது….
பெருக்கான்னும் கூப்பிட முடியாது.
இரண்டுக்கும் நடுப்பட்ட ரகம்.

ஒருவேளை அது கொஞ்சம் வலுவா இருக்குறதால…..
விஷத்தச் சாப்பிட்ட கையோட….
அடச்சீ… காலோட அம்மா மேல பாஞ்சுடுச்சுன்னா…?
அய்யோ….. நினைக்கவே கிலியாக இருந்தது.
.
யோசித்து யோசித்துப் பார்த்தேன்.
அது சாப்பிட்டு….
உணவில் கலந்த விஷம் உள்ளே போய்….
அது அப்புறம் வேலை செய்ய ஆரம்பித்து….
மயக்கம் வந்து…..
காலுக்குக் கீழ் உள்ள பசை கவ்விப்பிடித்து….
ச்சே…. இதெல்லாம் வீண் ரிஸ்க்.
நடைமுறைக்கு ஒத்தே வராது.
.
.
எலி அதைச் சாப்பிட்ட நொடியே
சொர்க்கலோகம் போயரனும்…..

அந்த மாதிரி ஹெவி டோசேஜ் என்ன இருக்கு…. ?
.
யோசித்தேன்.
.
வேறுவழியே இல்லை.
.
கொடுத்துற வேண்டீதுதான்.
ஜீரணித்துக் கொள்ள கொஞ்சம்
கஷ்டமாகத்தான் இருந்தது….
ஆனால் வேறு வழியேயில்லை.
.
.
.
சாப்பிட்டவுடனேயே பட்டுன்னு உசுரு போகனும்ன்னா….
.
ஒரே வழிதான் :
.
.
அம்மா செஞ்சு வெச்ச சோத்தை
அப்புடியே எதையுமே கலக்காம வெச்சிற வேண்டீதுதான்.
.
.
சக்ஸஸ்.

mummy-returns1a


வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்…

$
0
0

aarumuga_navalar
குமுதம் ஐம்பத்தி அஞ்சு வருசம் முன்னாடியே
ஒரு உருப்படியான விஷயத்தைச் செஞ்சிருக்குன்னு
தெரிஞ்சதும் புல்லரிச்சுப் போச்சு.
.
வள்ளலார் எழுதிய அருட்பாவிற்கு எதிராக
மருட்பா என்று எழுதி வம்புக்கு இழுத்த
ஈழத்தின் ஆறுமுக நாவலர் தொடுத்த வழக்கு
பற்றிய சமாச்சாரம்தான் அது.
.
கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் இருந்து
புலவர்களுக்குள்ளே இருந்துவரும் புலமைக் காழ்ப்பு உணர்வும்….
குல ஏற்றதாழ்வுகளும்தான்
இந்த வழக்குக்குக் காரணம் என்கிறார்
எழுத்தாளர் செ.திவான்.
.
அவரது “இராமலிங்க வள்ளலாரும்
செய்குத்தம்பிப் பாவலரும்” என்கிற நூல்
போகிற போக்கில் அநேக விஷயங்களைச்
சொல்லிச் செல்கிறது.
.
வள்ளலாரிடம் ஏற்கெனவே வாதத்தில் மண்ணைக்கவ்விய கடுப்பும்…..
நாவலர் என்றால்
பொய்யன்… வித்தையில்லாதவன்… என்று
பத்து அர்த்தம் சொன்ன வள்ளலார் மீது
ஏற்பட்ட எரிச்சலும் ஒன்று சேர
அது மான நஷ்ட வழக்காய் வந்து நின்றது.
.
மிகச் சரியாக 147 ஆண்டுகள் முன்பு நடந்த வழக்கு அது.
.
எல்லாம் சரி….
அறிவு சம்பந்தப்பட்ட விவகாரத்தில் குமுதம்
எப்படி வந்து தொலைத்தது என்று
முடியைப் பிய்த்துக் கொள்கிறீர்களா.
எனக்கும் முதலில் அந்தச் சந்தேகம் வரத்தான் செய்தது.
.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய
வள்ளலார் மீதே மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில்
வழக்குத் தொடுத்தார் ஆறுமுக நாவலர்.
.
சிதம்பரத்தில் நடந்த குடுமிபிடியை
அடிப்படையாக வைத்து தொடுக்கப்பட்ட அந்த வழக்கு
துல்லியமாக எந்தத் தேதியில் பதிவாயிற்று…?
.
சாட்சி சொல்ல வந்த ஒன்பது பேர் யார் யார்…?
என்கிற விவரங்கள் இன்னும்கூட
துல்லியமாகக் கிடைக்காத நிலையில்
31.8.1961 இல் குமுதத்தில் அந்த செய்தி பதிவாகியிருக்கிறது.
.
அதுவும் 55 ஆண்டுகள் முன்பு.
.
துமிலன் என்பவர் “புகழ்பெற்ற விவாதங்கள்” என்கிற
தலைப்பில் இந்த வழக்கு குறித்து எழுதியிருக்கிறார்.
.
அதைவிடவும் இதிலுள்ள சுவாரசியமான விஷயம்
வேறொன்று இருக்கிறது.
அதுதான் வழக்கு நடந்த விதம்.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட
நாளன்று நீதிமன்றத்தில் பெரும் கூட்டம் கூடியிருக்க
வருகிறார் வள்ளலார்.
.
இடுப்பில் முழங்காலுக்கு மேலே வெள்ளாடை தரித்து
மேலேயும் அதே ஆடை போர்த்திக் கொண்டிருந்த உருவம்
நீதிமன்றத்தை நோக்கி வர மக்களிடையே பரபரப்பு.

ஒல்லியான உடலும்….
பொறி பறக்கும் கண்களுமாய்
கண்களில் கவலையைத் தேக்கியபடி வந்த
வள்ளலாரைக் கண்டு நீதிமன்றமே எழுந்து நிற்கிறது.
.
மற்றவர்கள் நின்றால் பரவாயில்லை.
ஆனால் வழக்குத் தொடுத்த ஆறுமுக நாவலரே எழுந்து நின்றால்….?
.
இதைக் கவனிக்கிறார் நீதிபதி.

நீதிபதி : வாதியாகிய நீர் பிரதிவாதி
=======
நுழைந்தபோது ஏன் எழுந்து நின்றீர்கள்?
.
”எல்லோரும் எழுந்து நின்றார்கள். நானும் எழுந்து நின்றேன்.”
.
நீதிபதி : எல்லோரும் ஏன் எழுந்து நின்றார்கள்?
=======
.
”பெரியவர் வருகிறாரே என்று எழுந்து நின்றார்கள்”
.
நீதிபதி : நீங்கள் எதற்காக எழுந்து நின்றீர்கள்?
=======
.
“நானும் அதற்காகத்தான்.”
.
கேஸ் குடுத்த நீங்களே எந்திருச்சு நிக்கறீங்கன்னா…
அப்ப நிச்சயம் நீங்க குடுத்த கேஸ்
டுபாக்கூராத்தான் இருக்க முடியும்….
தள்ளுபடி பண்ணுறேன்… கெளம்புங்க வீட்டுக்கு… ன்னாராம் நீதிபதி.
.
.
vallalar1
( ”டுபாக்கூர் பக்கங்கள்” குமுதம் வார இதழ் )


ஜல்லிக்கட்டு…

$
0
0

jalli1
“ஜல்லிக்கட்டா..? அது வெறும் ஓரிரு மாவட்டங்களுக்கு மட்டும்தான்…”
என்றார்கள் ஏளனமாய்.
.
இறங்கின எண்ணற்ற மாவட்டங்கள்.
.
“தமிழகத்தின் தென் பகுதியில் மட்டும்தான்
இதுக்கு ஆதரவு…” என்றார்கள்.
.
வடக்கு… தெற்கு… கிழக்கு… மேற்கு… என
சகல திசைகளில் இருந்தும் ஆர்ப்பரித்தனர் மக்கள்.
.
“தமிழகம் தாண்டாது
இந்த வெத்து விளையாட்டு…” என்றார்கள்.
.
கேரளத்தில் இருந்தும் ஆதரவாக ஒலித்தது குரல்.
.
“ஓரிரு சாதியைத் தாண்டி
யார் விளையாடுகிறார்கள் இதை….?” என்கிற
முணுமுணுப்புக்கு….
.
கிரிக்கெட்டும் அப்படித்தான்….
ஆனால் அதற்காக அப்படியே விட்டுவிட்டோமா அதை…?
என்றனர் இளைஞர்கள்.
.
“காளையை அடக்குவதா உன் பாரம்பரியம்…?
முடிந்தால் சிங்கத்தோடு போராடிப் பாரேன்…”
என்று கேட்ட மெத்தப்படித்த மேதாவிகளிடம்…
.
அனைத்து சாதியினரும் வேதங்களைக் கரைத்துக் குடித்தாலும்….
” இந்த சாதியினர் மட்டும்தான்
பாரம்பரியத்தின் பிரகாரம் அர்ச்சகர் ஆக வேண்டும்…”
என்று வக்காலத்து வாங்கிய நீயா
எங்களைப் பார்த்து இப்படிக் கேட்பது…? என்று
பதிலடி கொடுத்தது அந்த இளைஞர் கூட்டம்.
.
“பெண்களுக்கு ஏது இடம் இதில்….?” என்றார்கள்.
.
முதலில் தடையை உடைப்போம்.
பிற்பாடு பாருங்கள் பெண்கள் மட்டுமல்ல
திருநங்கையரும் கரம் கோர்த்து
களம் காணும் காட்சியைக் காண்பீர்கள்…. என்று
நியாயக் குரல் கொடுத்தார்கள் கூடி இருந்தவர்கள்.
.
“வழிபாட்டுரிமைச் சட்டப்படி
விலக்கு கோரினால் எளிதாக
வென்றுவிடலாமே வழக்கை…”
என்ற மூடர்களைப் பார்த்து…
.
மதங்களுக்கு அப்பாற்பட்டது எங்கள் பொங்கல்….
பின்பற்றுகிற மார்க்கம் எதுவாக இருந்தாலும்
மொழியால் இணைந்த
இந்து இஸ்லாமிய கிருத்துவ மக்கள்
அனைவருக்குமானது எங்கள் பொங்கல்…
நீ கொஞ்சம் ஒதுங்கி நில்… என்று
நெத்தியடி கொடுத்தனர் மக்கள்.
.
“இந்தியாவைத் தாண்டி
எங்கே கேட்கப் போகிறது இந்தக் குரல்…?” என்றார்கள்.
.
jalli3
இனப்படுகொலையிலேயே
எண்ணற்ற ஜீவன்களை இழந்திருந்தாலும்…
“நாங்கள் இருக்கிறோம் உங்களுக்காக…” என்றனர்
நம் ஈழத்து மக்கள்.
.
“இம்புட்டுதான்…..
இதுக்கு மேல யாரு?” என்று
முனகிய மூடர்களைப் பார்த்து
.
இலண்டனிலும்…
ஃப்ரான்சிலும்…
சிட்னியிலும் எழுந்த போராட்டங்கள்
ஏளனமாய்ச் சிரித்தன.
.
இந்த எழுச்சி…..
இதற்கான போராட்டம் மட்டுமல்ல.
.
மனித குல விடுதலைக்கான தொடக்கம்.
jalli2


ஒண்டவந்த பிடாரி…

$
0
0

kumudam-dubakoor-feb1_a
ஒண்டவந்த பிடாரி
ஊர்ப்பிடாரிய விரட்டுச்சாமா….
.
அந்த மாதிரி
செவ்விந்தியர்களுக்குச் சொந்தமான மண்ணை
எங்கெங்கிருந்தோ போய் ஆட்டையப் போட்ட கூட்டம்
ஏழு நாட்டினரை அமெரிக்காவுக்குள் நுழையாதே என்கிறது.
.
போரின் நிமித்தம் அகதிகளாக அலையும்
மக்களின் வாழ்வோடு விளையாடுகிறது ட்ரம்ப் அரசு.
.
ஆனால் அதையெல்லாம் கண்டிப்பதற்கான
யோக்யதை நமக்கு இருக்கிறதா? என்று யோசித்தால்
வீண் வயிற்றெரிச்சல்தான் மிஞ்சும்.

இன்றைக்கு இப்படிச் செய்யும்
இதே அமெரிக்காதான் அகதிகள் நலனுக்கான
அத்தனை ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டிருக்கிறது
கடந்த காலங்களில்.
.
அதிலும் குறிப்பாக
அகதிகளுக்கான ஐ.நா அகதிகள் நலக்கமிஷனில்….
.
ஆனால் அமெரிக்காவைக் கண்டிக்கும் நாமோ
UNHCR இல் கையெழுத்திட இன்னமும்
எமகண்டம் ராகுகாலம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
.
இந்தியாவிற்குள் இருக்கும் அகதிகளைப் பராமரிப்பதிலேயே
ஏகப்பட்ட பாகுபாடுகள்.

சீனாவுக்கு சிக்கலாக இருக்கும்
திபெத்திய அகதிகளுக்கு ரத்தினக் கம்பள வரவேற்பு……
.
நம் ஈழத்து மக்களுக்கோ
திறந்த வெளிச் சிறைச்சாலைகள்.
அதுவாகப்பட்டது ”முகாம்கள்”.
.
போனவருடம்
ஈழத்து மக்களது முகாமில் கணக்கெடுக்க
வந்த அதிகாரியிடம்….

தன் மகனை மருத்துவமனையில் சேர்த்திருக்கும்
தகவலைச் சொல்ல….
அதைக்கூட அந்த அதிகாரி ஏற்றுக்கொள்ள
மறுத்து ஏசியதன் விளைவு….

உயர் மின் அழுத்த கம்பத்தில் ஏறி
உயிரையே மாய்த்துக் கொண்டார்
ஈழத்து ஏதிலி இரவிச்சந்திரன்.
.
இது நடந்தது இலங்கையில் அல்ல
இங்குள்ள மதுரையில்.
.
ஆனால் நாமோ அமெரிக்காவைப் பற்றி
அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறோம்.
.
பாகிஸ்தானில் அல்லல்படும்
ஷியா பிரிவு மக்களைக் கண்டும் காணாமல் விட்டுவிட்டு
பலுசிஸ்தானின் மக்கள் குறித்து
பெரும் கவலை கொள்கிறோம்.
.
ஒரே ஒருமுறை….
மரத்தடுப்புகளுக்குள் ஒடுங்கி வாழும்
நம் ஈழத்து மக்களது அகதிகள் முகாமையும்….
.
நீச்சல்குளம்…..
கால்ஃப் மைதானம்….
ATM செண்டர்….
என சர்வ வசதிகளோடும்
வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கும்
திபெத்திய “அகதிகள்” முகாமையும்
பார்த்துவிட்டு வந்தால் தெரியும்….
.
நாம் ”வந்தாரை” எந்த லட்சணத்தில்
”வாழவைத்துக்” கொண்டிருக்கிறோம் என்கிற உண்மை.
.
.
மனிதாபிமானமாவது வெங்காயமாவது….
.
.
மனிதாபிமானத்தைவிட ”மகத்தானது” அல்லவா
நம் புவிசார் அரசியல் சூழல்?
.
.
( “டுபாக்கூர் பக்கங்கள்” குமுதம் வார இதழ் )



நேற்றைய வரலாறும்…நாளைய பொழுதும்….

$
0
0

ash-adichuvattilநண்பர்களது வட்டாரத்தில் “சலபதி” என்றழைக்கப்படும்
ஆ.இரா.வேங்கடாசலபதியின் எழுத்துக்கள்
மிகவும் பிடிக்கும் எனக்கு.

அதிலும் அவரது ஆணித்தரமான எழுத்துக்களுக்கு நடுவே
இழையோடும் அந்தக் குசும்பு.
.
அவரது “ஆஷ் அடிச்சுவட்டில்” என்கிற
நூலைப் பார்த்துக் கொஞ்சம் திகைத்துத்தான் போய்விட்டேன் நான்.
.
இந்நூலில் நாம் அறியாத…..
அல்லது மறந்த…..
அதுவுமல்லது மறைக்கப்பட்ட
மகத்தான மனிதர்களைப்பற்றிய வரலாறு
தேடியெடுக்கப்பட்டிருக்கிறது.
.
ஜி.யு.போப் தனது கல்லறைக் கல்வெட்டு
தமிழர்களால்தான் அமைக்கப்பட வேண்டும் என பேரார்வம் கொண்டதும்….
அதற்காக தமிழ்நாட்டினர் நிதி திரட்டி
அவரது ஆசையை நிறைவேற்றிய செய்தியும்…
நாம் அறியாதது.
.
அத்தோடு “இக்கல்லறைக் கல்வெட்டு தென்னிந்தியாவில் உள்ள
தமிழ் நண்பர்களால் நிறுவப்பட்டது” என்கிற செய்தியும்
அதில் செதுக்கப்பட்டிருக்கிறது
என்பது நம்மை சிந்திக்க வைக்கின்றது.
.
அடுத்து…..
.
தமிழகம் மறந்துபோன டி.வி.சாம்பசிவம் பிள்ளை
4000 பக்கங்களும் 80,000 கலைச் சொற்களும் கொண்ட
சித்த மருத்துவ அகராதியைத் தொகுத்தவர் என்பதும்….

அவருக்கிருந்த ஆங்கில மொழியாற்றலும்….

ஆனால் அவர் பள்ளி இறுதி வகுப்புவரை மட்டுமே படித்தவர் என்பதும்….
நான் அறியாத செய்திகள்.
.
வாரிசின்றி இறந்துபோன அவரது வீடு
சென்னை தாசில்தாரால் பூட்டு போடப்பட்டதாம்.
அப்போது அவர் தொகுத்திருந்த ஆவணங்கள் எல்லாம்
அள்ளிச் செல்லப்பட்டு சென்னை கலெக்டர் அலுவலகத்தில்
கேட்பாரற்றுக் கிடந்திருக்கிறது.
.
கரையான்களோடும்….
சிலந்திகளோடும் போர் தொடுத்துக் கொண்டிருந்த
அந்த அரிய ஆவணங்களைக் கண்டெடுத்தவர்
மறைமலையடிகள் நூல் நிலையத்தைத் தோற்றுவித்த
சுப்பையா பிள்ளைதான்.
.
.
t-v-sambasivam
இவை எல்லாவற்றையும்விட இதில்
ஒரு பேரதிர்ச்சியும் உண்டு.
.
அதுதான் :
.
இந்த டி.வி. சாம்பசிவம்பிள்ளை
மருத்துவத் துறையில் பயின்றவரல்ல…..
போலீஸ்காரராக இருந்தவர் என்பதுதான் அது.
சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில்
ரைட்டராகச் சேர்ந்து 1907 இல் எஸ்.ஐ.ஆக ஆனவர்.
.
ஆக இவரை வைத்து
”இதுவும்தாண்டா போலீஸ்” என பெருமிதப்பட்டுக்
கொள்ளலாம் காக்கிச் சட்டைகள்.
.
இவைகளோடு மட்டுமன்றி….
.
சென்னைத் தொழிலாளர் வர்க்கத்தின் உருவாக்கம்
.
மற்றும் அதன் போராட்டங்கள் பற்றிய வரலாற்றை….
பார்வை இழந்த நிலையிலும் எழுதிய
தே.வீரராகவனின் வாழ்க்கை…
.
வாஞ்சியால் கொல்லப்பட்ட ஆஷ் துரையின் குடும்பத்தினரை
அயர்லாந்தின் தலைநகர் டப்ளினுக்கே சென்று…
கண்டு…. கலந்துரையாடி வந்த சம்பவங்கள்…..
.
என எண்ணற்றவர்களின் மறைக்கப்பட்ட….
மறக்கப்பட்ட வரலாறுகளின் தொகுப்பே
இந்த “ஆஷ் அடிச்சுவட்டில்” என்கிற இந்த நூல்.
.
நாளைய பொழுதைத் தீர்மானிக்க வேண்டுமென்றால்
.
நாம் நேற்றைய வரலாற்றைத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.
.
ஆம்.
.
வரலாற்றைப் படிப்பவர்களே
.
வரலாற்றை உருவாக்க முடியும்.
.
.
( “டுபாக்கூர் பக்கங்கள்” – 25.01.2017 – குமுதம்)
a-r-venkatachalapathy


வேறென்ன பெருமை…?

$
0
0

manavai
யார் முதலமைச்சர்….?
யாருக்கு மக்களின் உண்மையான ஆதரவு? என
நாம் அனைவரும் மயிர்பிளக்க
விவாதித்துக் கொண்டிருந்த வேளையில்
இந்த மொழிக்காகவும் மக்களுக்காகவும்
சத்தமின்றி உழைத்த ஒரு மகத்தான மனிதர்
தன் வாழ்நாளை நிறைவு செய்து கொண்டார்.
.
அவர்தான் தமிழறிஞர் மணவை முஸ்தாபா.
.
கவிதைத் தமிழ் வளர்ந்தால் மட்டும் போதாது
கணிணித் தமிழும் வளரவேண்டும் என்று
அதற்கான கலைச்சொல் அகராதியை
உருவாக்கியவர்தான் மணவை முஸ்தாபா.
.
தமிழை வளர்ப்பதற்கு புலவர்களும் புரவலர்களும் இருக்க…..
தமிழர்கள் வளர வேண்டுமானால்
அவர்கள் தொழில் நுட்பம்…. அறிவியல்…. மருத்துவம் என
அனைத்துத் துறையிலும் தூள் கிளப்ப வேண்டும் என
அவர் உருவாக்கித் தந்த அகராதிகள் ஏராளம்.
.
முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என மூவரிடமும் விருது பெற்ற ஒரே தமிழறிஞர் இவராகத்தான் இருக்க முடியும்.
.
தமிழ் மீது கொண்ட காதலால்
தன் குழந்தைகளுக்கு
“செம்மல்”…. ”அண்ணல்”…. ”தேன்மொழி”…..என
தூய தமிழ்ப் பெயர்களையே சூட்டியவர் இவர்.
.
பத்தாண்டுகள் முன்பான மாலைப் பொழுதொன்றில்
எங்கள் அறையில் அவர் காலடித் தடம் பதிந்தபோது
அவர் வாசித்த தமிழை
நாங்களும் கொஞ்சம் சுவாசித்தோம்.
.
எத்தனையோ அகராதி பிடித்தவர்களோடு
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில்
மக்களுக்காக எண்ணற்ற அகராதிகளைப் படைத்தவர்
வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம்
என்பதைக் காட்டிலும் பெருமை வேறென்ன இருக்க முடியும்?


எந்த மகளிருக்கான தினம்….?

$
0
0


”மகளிர் தினம்”… என்றால்?
எந்த மகளிருக்கான தினம்
என்கிற கேள்வி எப்போதும் எனக்குள்ளே உண்டு.
.
வழக்கமாக கல்பனா சாவ்லா தொடங்கி
கவுன்சிலர் காயத்ரி வரைக்கும்
ஏகப்பட்ட முன்னுதாரணங்களை அள்ளிவீசுவார்கள்.
.
முதன் முதலில் கப்பலோட்டிய பெண்மணி….
உலகின் உயர்ந்த சிகரத்தைத் தொட்ட முதல் பெண்…
என ஏராளமான பட்டியல்கள் உண்டு நம்மிடம்.
.
ஆனால் என்னைப் பொறுத்தவரை
நான் இன்றைக்கும் குற்ற உணர்ச்சியோடு
கூனிக்குறுகி நிற்பது
துப்புரவுப் பணிகளில் இருக்கும்
நம் சகோதரிகளை நினைத்துத்தான்.
.
எத்தனை கோடி கொடுத்தாலும்
நானும், என் தாயும் துணைவியும்
செய்யக் கூசும் பணிதான்
அவர்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை.
இந்த ஊர் அழகாக இருக்க வேண்டும்
என்பதற்காக தங்களை அசுத்தப்படுத்திக் கொள்கிறவர்கள்
அவர்கள்.
.
தம் குழந்தைகள் எழும் முன்பே
அதிகாலையில் கிளம்பி
மூலையில் உள்ள தேநீர்க் கடையில்
நேற்றைய டீக்கு காசு கொடுக்காததற்குத்
திட்டு வாங்கியபடியே இன்றைய டீயை கெஞ்சிக்கேட்டு
வாங்கிக் குடித்துவிட்டு
மாநகராட்சி வாசலில் அணிவகுத்து நிற்பார்கள்
இந்தத் தாய்கள் வெற்று வயிரோடு.
.
நீளக்குச்சியில் செருகப்பட்ட சீமாறும்….
தகரத் தொரட்டியும் கையுமாக
அவர்கள் ”நகர்வலம்” வருவதைப் பார்த்தால்
நிச்சயமாகச் சொல்லலாம்
“இந்தியா ஒரு வல்லரசுதான்” என்று.
.
இதில் மட்டும் மொத்த இட ஒதுக்கீட்டையும்
அவர்களுக்காகவே அள்ளித் தந்திருக்கிற
“வள்ளல்கள்” நாம்.

ஓயாத மழைக்காலங்களிலும்….
நாம் தெருவைக் குப்பையாக்கிக்
கொண்டாடித் தீர்த்த பண்டிகை காலங்களிலும்…..
நெஞ்சு வலிக்க சுத்தம் செய்த கையோடு
ஒரு குரல் கேட்கும்….
.
”சாமீ….
பலகாரம் ஏதாவது இருந்தா குடுங்க சாமீ” என்று.
.
செத்துவிடத் தோன்றும் அந்த நொடி.
.
இப்பெண்கள்….
ஆம்…
ஒடுக்கப்பட்டோரிலும் ஒடுக்கப்பட்டோராய்
வாழ்கிற இந்தத் தாய்கள்….

தலை நிமிரும் தினமே
என்னைப் பொறுத்தவரை
மகளிர் தினம்.
.
.
( “டுபாக்கூர் பக்கங்கள் ” குமுதம் )


தினத்தந்தி…

$
0
0


கடைகோடித் தமிழனையும்
தமிழ் படிக்க வெச்சது
தந்திதான்னு சில பேர் சொல்லிக்கிறது உண்டு.
.
தமிழ் படிக்கிறதெல்லாம் இருக்கட்டும் ஒருபக்கம்.
.
ஆனா இங்கிலீஷ் ஒழுங்கா படிச்ச
ஒரு ஆள்கூடவா அங்க இல்ல…?
.
தமிழக மீனவர் படுகொலை செய்யப்பட்டதற்கு
இந்திய அரசு தனது ”ஆழ்ந்த கவலையத்” தெரிவிச்சா…..
.
அதை அப்படியே உல்டா பண்ணி்
“கடும் கண்டனமா” மாத்திப் போடுது.
.
.
ஏம்ப்பா Deeply Concerned க்கும்…..
Strongly Condemned க்கும்…..
கூடவா வித்தியாசம் தெரியாது உங்குளுக்கு?
.
அங்கதான் ஏற்கெனவே ஏகப்பட்ட அகராதிக இருக்குதே…..
.
அதுக மத்தீல இங்கிலீஷ் தெரிஞ்ச அகராதி
ஒன்னு கூடவா இல்ல?
.
ஓ…..
.
இதத்தான் ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசம்…ன்னு
சொல்லுவாங்களோ?
.
அட கூமாங்குகளா…..


பெரியாரின் நெத்தியடி…

$
0
0


தமிழகம் இந்தியாவின் எந்த மாநிலத்திற்கும் சளைத்ததல்ல.
நாம்தான் மற்ற மாநிலங்களுக்கே முன்னோடி
என்பது மத்திய பிரதேச முதல்வரின்
பேச்சைக் கேட்டால் புரிந்து போகும்.
.
மகளிர் கூட்டமொன்றில் பேசிய
சிவ்ராஜ் சிங் செளகான்
“இனி யாரும் கணவனை இழந்த கைம்பெண்களை
“விதவைகள்” என்றழைக்கக் கூடாது.
அவர்களை இனி “கல்யாணி” என்றுதான்
அழைக்க வேண்டும்” என்று அறிவித்திருக்கிறார்.
.
இக்கைம்பெண்களது நிலை குறித்து
2017 இல் மத்தியப் பிரதேசம்
(அதுவும் பெயர் மாற்றம் குறித்து மட்டும்) சிந்தித்தால்….
தமிழகம் இவர்களது மறுவாழ்வு குறித்து
சிந்தித்து செயலாற்றத் தொடங்கி
நாற்பதாண்டுகளுக்கும் மேலாகிறது
என்பதுதான் இதன் ஹை லைட்.

பெயர் மாற்றத்தையும் தாண்டி
அவர்களது மறுமணம் குறித்தும் சிந்தித்ததில்
நிச்சயம் தமிழகத்திற்குத்தான் முதலிடம்.
.
“டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு
விதவை மறுமண நிதியுதவித் திட்டத்தின்படி”

பட்டப்படிப்பு இல்லாத கைம்பெண்கள்
மறுமணம் செய்து கொண்டால்
25000 ரூபாய் நிதியுதவியோடு 4 கிராம் தங்க நாணயமும்,

பட்டதாரிகளெனில் 50000 ரூபாயோடு
4 கிராம் தங்க நாணயத்தையும் அளித்து
அவர்களது மறுவாழ்வைப் பற்றிச் சிந்திக்கிறது தமிழகம்.
.
“மனைவியை இழந்த ஆண்
மறுமணம் செய்து கொள்ளலாமா?
வேண்டாமா? என்பதைப் பற்றி
எந்தப் பெண்ணாவது அபிப்பிராயம்
சொல்ல வருகிறார்களா?

அப்படியிருக்க,
கணவனை இழந்தவள்
மறுமணம் செய்து கொள்ளலாமா?
வேண்டாமா? என்பதைப் பற்றி
அபிப்பிராயம் சொல்ல
ஆண்களுக்கு என்ன உரிமையிருக்கிறது?”
.
என்று பொட்டில் அடித்த மாதிரி
நெத்தியடியாய்க் கேட்டார் தந்தை பெரியார்.
.
என்றைக்குத் தெரியுமா?
.
இன்று நேற்றல்ல. 89 ஆண்டுகள் முன்பாகவே.
.
அதுவாகப்பட்டது 1929 இல்.
.
இதுதானுங்கோ தமிழ்நாடு.
.
.
( “டுபாக்கூர் பக்கங்கள்” குமுதம் வார இதழ் )


Viewing all 103 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>